Published : 19 Aug 2018 12:39 AM
Last Updated : 19 Aug 2018 12:39 AM

90 ஆண்டுகள் பழமையான திருச்சி கொள்ளிடம் பாலம் உடைந்தது: ஒரு தூண் சரிந்த நிலையில் மற்றொரு தூணும் உள்வாங்கியது

திருச்சி மாநகரில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 90 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த பாலத்தில் ஒரு தூணில் விரிசல் ஏற்பட்டு சரிந்த நிலையில், மற்றொரு தூண் நேற்று மாலை உள்வாங்கியதைத் தொடர்ந்து பாலம் உடையத்  தொடங்கியுள்ளது.

திருச்சியில் நெ1. டோல்கேட்- திருவானைக்காவல் பகுதியை இணைக்கும் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாழ்ந்த பாலம் உள்ளது. இந்த பாலம் 1928-ம் ஆண்டில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. கீழே செங்கல் கட்டுமானத்தில் தூண்களும் பாலத்தின் மீது பெரிய இரும்பு தண்டவாளங்களைக் கொண்டு பக்கவாட்டு தடுப்பும் அமைக்கப்பட்டு, பாலத்தின் மீது தார் போடப்பட்டிருந்தது.

இந்தப் பாலம் வலுவிழந்ததைத் தொடர்ந்து 2007 முதல் கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

புதிய பாலம்

இதைத் தொடர்ந்து இந்த பாலத்தின் அருகிலேயே சென்னை நேப்பியர் பாலத்தின் மாதிரியில் கட்டப்பட்ட புதிய பாலத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2016-ல் காணொலிக் காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

இந்நிலையில், கடந்த 4 தினங்களாக கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பழைய பாலத்தின் 18-வது தூணில் கடந்த 16-ம் தேதி இரவு லேசான விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பாலத்தின் இருவாயில்களும் முற்றிலுமாக அடைக்கப்பட்டு, யாரும் செல்ல முடியாதவாறு தடை செய்யப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால், 18-வது தூணில் ஏற்பட்டிருந்த விரிசல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, அந்த தூண் சரிந்து முழுமையாக உள் வாங்கியது. இதனால் பாலத்தின் மேல்பகுதி உடைந்தது. கொள்ளிடம் ஆற்றில் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், பழைய பாலத்தின் 20-வது தூண் நேற்று திடீரென உள்வாங்கியது. இதனால் பாலம் ஓரிரு நாளில் முற்றிலுமாக இடிந்து விழ வாய்ப்புள்ளது என்கின்றனர் பொதுப்பணித் துறை

அதிகாரிகள்.

பாலம் உடைந்தது ஏன்?

ஆற்றில் தண்ணீர் இல்லாத காலத்திலும் பழைய பாலத்தின் அடியில் தூண் உள்ள பகுதியில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியதும், பாலத்தில் தூண்களுக்கு அருகிலேயே மணல் அள்ளியதுமே தூண்கள் சேதமடைய காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

ஆனாலும், வெள்ளம் வடிந்த பின்னர்தான் தூண் இடிந்ததற்கான காரணம் தெரியவரும். இந்த பாலத்துக்கு 60 ஆண்டுகள்தான் ஆயுள், ஆனால் 90 ஆண்டுகளை கடந்து விட்டதும்கூட பாலம் பழுதடைய காரணமாக இருக்கலாம்  என பொதுப்பணித் துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x