Published : 01 Aug 2018 05:19 PM
Last Updated : 01 Aug 2018 05:19 PM

மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகப் புகார்: கோவை தனியார் விடுதி பெண் வார்டன் நீதிமன்றத்தில் சரண்

 

கோவையில் தனியார் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த பெண் வார்டன் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை கணபதி மாநகரைச் சேர்ந்த ஜெகநாதன் (48), பீளமேடு பாலரங்கநாதபுரம் ஜீவா வீதியில் தர்ஷனா என்ற பெயரில் மகளிர் தங்கும் விடுதி நடத்தி வந்தார். இங்கு பீளமேடு பகுதியைச் சேர்ந்த புனிதா (32) வார்டனாகப் பணியாற்றினார்.

இந்த விடுதியில், கல்லூரி மாணவியர், வேலைக்குச் செல்வோர் என 150-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் ஜெகநாதனுக்குப் பிறந்த நாள் என்று கூறி, விடுதியில் இருந்த 5 மாணவிகளை, கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலுக்கு வார்டன் புனிதா அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு மது அருந்துமாறும், வாட்ஸ் அப் மூலம் ஜெகநாதனுடன் பேசுமாறும் அந்த மாணவிகளைப் புனிதா வற்புறுத்தியுள்ளார். வாட்ஸ் அப் மூலம் ஜாலியாகப் பேசுமாறும், அவர் மகிழ்ச்சியடையும் வகையில் செயல்பட்டால், விடுதிக் கட்டணம்கூட கட்ட வேண்டாமெனவும் புனிதா தெரிவித்தாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, அந்த மாணவிகள், தங்களது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து விடுதியை முற்றுகையிட்டு மாணவிகளின் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.

இது தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில், நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில், கிணற்றில் மர்மமான முறையில் ஜெகநாதன் இறந்துகிடந்தார். தலைமறைவான புனிதாவை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.6-ல் புனிதா புதன்கிழமை சரணடைந்தார். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாநகர போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x