Published : 13 Aug 2018 07:06 PM
Last Updated : 13 Aug 2018 07:06 PM

திமுகவில் இல்லாத அழகிரிக்கு பதில் சொல்ல முடியாது: ஜெ.அன்பழகன் பதில்

அழகிரி கட்சியில் இல்லை. அவரது கருத்துக்கு பதில் சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. நாளை செயற்குழுவில் பதில் சொல்வார்கள் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி மறைவை அடுத்து இதுவரை அமைதியாக இருந்த மு.க.அழகிரி இன்று சமாதியில் அஞ்சலி செலுத்தியபின்னர் பகிரங்கமாக விமர்சனம் செய்து பேட்டியளித்தார். தாம் ஆதங்கத்தில் இருப்பதாகவும், உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கம் உள்ளனர் என்று பேட்டி அளித்தார்.

இதற்கு திமுக மூத்த தலைவர்கள் யாரும் பதிலளிக்காத நிலையில் மாவட்டச்செயலாளர் பொறுப்பில் உள்ள ஜெ.அன்பழகன் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஜெ.அன்பழகன் கூறியதாவது:

மு.க.அழகிரி கட்சியிலிருந்து கருணாநிதியால் நீக்கி வைக்கப்பட்டுள்ளவர். ஆகவே அவர் என்ன கருத்து சொன்னாலும் திமுகவில் இல்லாத ஒருவர் கூறும் கருத்தாகத் தான் பார்க்கவேண்டும். இதுப்பற்றி செய்தியாளர்களும், ஊடகத்தினரும் இதைப்பார்க்கும் மற்றவர்களும் புரிந்துக்கொள்ளவேண்டும்.

அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர், அதுவும் இப்போதுள்ள எங்களால் அல்ல, திமுக தலைவர் கருணாநிதியால் நீக்கப்பட்டவர் என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும். எனவே அவர் சொல்லிக்கொண்டிருக்கிற கருத்துக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கிற நிலையில் நாங்கள் இல்லை.

நாங்கள் எங்கள் தலைவர் கருணாநிதியை இழந்த துக்கத்தில் இருக்கிறோம். இது குறித்து நாளை செயற்குழு கூட இருக்கிறது. விரிவான பதிலை செயல்தலைவர், கட்சி, பொதுச்செயலாளர் எல்லாம் சொல்வார்கள். நாங்கள் யாரும் அவருடன் தொடர்பில் இல்லை நாங்கள் கட்டுகோப்பாக இருக்கின்றோம்.

இவ்வாறு ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x