Published : 09 Aug 2018 10:15 AM
Last Updated : 09 Aug 2018 10:15 AM

அஞ்சலி செலுத்த வந்தபோது பரிதாபம்; செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் திமுக பிரமுகர் பலி: 6 பேர் காயம்

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த விருதுநகர் திமுக பிரமுகர் சாலை விபத்தில் பலியானார் அவருடன் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர்.

விருதுநகர் மாவட்டம் வீரசோழம் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (50)  இவர் திமுகவில் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை மாவட்ட துணைச் செயலாளராக இருந்தார். நேற்று திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த தன்னுடைய கட்சியினர் 7 பேருடன் தன்னுடைய காரில் சென்னை நோக்கி நேற்று முன் தினம் மாலை புறப்பட்டார். காரை ஓட்டுநர் ஜெயமுருகன் என்பவர்  ஓட்டினார்.

நேற்று காலை மதுராந்தகம் அருகே வந்தபோது  ஒட்டுநர் ஜெயமுருகன் தூக்க கலக்கத்தில் இருப்பதால், தானே ஓட்டுவதாக கூறி மணிவண்ணன் காரை இயக்கினார். இந்நிலையில் அதிகாலை 5 மணிக்கு செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை புலிப்பாக்கம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் மைய பகுதியில் உள்ள மரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணிவண்ணன்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் அவருடன் பயணித்த  ஓட்டுநர் முருகன், பெரியசாமி, மாரிமுத்து, செல்லதுரை, தங்கப்பாண்டியன், ஜோசப் ஆகியோர் படுகாயமடைந்தனர். இவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x