Published : 20 Aug 2018 02:21 PM
Last Updated : 20 Aug 2018 02:21 PM

தமிழகம், புதுவையில் ஓரிரு இடங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில்  அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக் கல்லாரில் 7 செமீ, வால்பாறையில் 5 செமீ, நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 4 செமீ, தேனி மாவட்டம் பெரியாறில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வடமேற்கு மத்திய வங்கக்கடல், அந்தமான் நிக்கோபர் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இந்தப் பகுதிகளில் கடல் சீற்றமாகக் காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது'' எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x