Published : 26 Aug 2018 08:29 AM
Last Updated : 26 Aug 2018 08:29 AM

ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகியும் பலன் இல்லை; மெட்ராஸ் ஐகோர்ட் ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாறுமா?: மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் எதிர்பார்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றி 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இன்னும் அதற்கான எந்த முயற்சிகளிலும் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது வருத்தம் அளிக்கிறது என வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

லண்டனில் உள்ள பெய்லி நீதிமன்றத்துக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் கருதப்படுகிறது.

விக்டோரியா மகாராணியின் காப்புரிமைப்படி இந்தியாவில் சென்னை, மும்பை, கொல்கத்தா வில் மூன்று பிரசிடென்சி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றம் 1862 ஜூன் 26-ல் தொடங்கப்பட்ட பாரம் பரியமிக்க உயர் நீதிமன்றமாகும்.

ஆரம்பத்தில் ‘சுப்ரீம் கோர்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்றுதான் இந்த நீதிமன்றம் அழைக்கப்பட்டது. அதன்பிறகு 1862 ஆகஸ்ட் 15 முதல் ‘‘மெட்ராஸ் ஐகோர்ட்’’ என பெயர் மாறியது.

1996 -ம் ஆண்டு திமுக ஆட்சியில் மெட்ராஸ் என்பது சட்டப்பூர்வமாக சென்னை என பெயர் மாற்றம் கண்டது. அப்போது மெட்ராஸ் ஐகோர்ட் என்ற பெயரையும் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை சென்னை உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்கு பாஜக அரசின் மத்திய அமைச்சரவை கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்புதல் அளித்தது.

ஜெயலலிதாவின் தீர்மானம்

ஆனால் 1956-ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட உயர் நீதிமன்றங் களுக்கு அந்தந்த மாநிலங் களின் பெயர்களே வைக்கப்பட் டுள்ளன. எனவே சென்னை உயர் நீதிமன்றம் என்பதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயல லிதா அதே ஆண்டு (2016) ஜூலை 31-ம் தேதி தமிழக சட்டப்பேர வையில் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார்.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்வதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சிக்கு கடந்த 2 ஆண்டுகளாக எந்த பலனும் இல்லாமல் போய்விட்டதாக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் செயலாளரான ஆர்.கிருஷ்ணகுமார் கூறும்போது, ‘‘மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பது தமிழக வழக்கறிஞர்களின் 20 ஆண்டு கால கோரிக்கை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவின் விருப்பம் வெறும் தீர்மானத்தோடு நின்று விட்டது. எனவே பெயர் மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக் கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்’’ என்றார்.

இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் கே.பகவத்சிங் கூறும்போது, ‘‘ உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கக் கோரி முதன்முதலில் மதுரையில் போராட்டத்தை முன்னெடுத்தோம். அப்போது மெட்ராஸ் உயர் நீதிமன்றம் என்பதை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ என்றும் மதுரையை ‘தமிழ்நாடு உயர் நீதிமன்ற கிளை’ என்றும் பெயர் மாற்றக் கோரி கோரிக்கை விடுத்தோம்.

மேலும் உயர் நீதிமன்றத் தில் தமிழை வழக்காடு மொழி யாக்கக் கோரி முதன் முதலில் அதிமுக அரசு கடந்த 2002-ல் குரல் கொடுத்தது. அதன் பிறகு 2006-ல் திமுக அரசு அதை வலியுறுத்தி தீர்மானம் போட்டது. ஆனால் அந்த தீர்மானத்தின்படி இன்று வரை தமிழ் வழக்காடு மொழியாக மாறவில்லை. பெயரும் மாறவில்லை.

கடந்த 2016-ல் சட்டம் மற்றும் நீதிக்கான பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவி வகித்த முன்னாள் எம்பி சுதர்சன நாச்சி யப்பன் மத்திய அரசுக்கு அளித்துள்ள அறிக்கையின் 85-வது பரிந்துரையில், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெயர் மாற்றுவதற்கான எந்த முயற்சிகளிலும் தற்போதைய தமிழக அரசு ஆர்வம் காட்டாதது வருத்தம் அளிக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x