Published : 05 Aug 2018 07:42 AM
Last Updated : 05 Aug 2018 07:42 AM

கேரளாவைப் போல் தமிழக பாஜக இளைஞர் அணியிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியரை அதிக அளவில் சேர்க்க திட்டம்: தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் தகவல்

தமிழக பாஜக இளைஞர் அணியில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அதிக அளவில் சேர்க்க பாஜக திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு இளைஞர் அணியின் முக்கிய பொறுப்புகளை வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக பாஜக இளைஞர் அணி தேசிய துணைத் தலைவர் ஏ.பி.முருகானந்தம் கூறினார்.

மக்களவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இதையொட்டி, நாடு முழுவதும் பல்வேறு செயல்திட்டங்களை பாஜக தீட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் பாதயாத்திரை, மக்கள் ஈர்ப்பு போராட்டங்களில் அதிகமாக பங்கெடுக்க பாஜக இளைஞர் அணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தில் பாஜக இளைஞர் அணி சார்பில் ஜனரக்சா என்ற பெயரிலான மக்கள் பாதுகாப்பு யாத்திரையை பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் பங்கேற்றனர்.

தேவாலயங்களில் இடம்

இந்த யாத்திரையின்போது, கிறிஸ்தவர்கள் அதிக அளவில் பாஜகவில் இணைந்தனர். தவிர, இந்த யாத்திரையின்போது பாஜகவினர் தங்குவதற்கு தேவாலயங் களில் இடம் கொடுத்து, உணவு கொடுத்து கிறிஸ்தவர்கள் உபசரித்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

தேர்தலை எளிதாக சந்திப் பதற்கு முன்னோட்டமாக, கேரள பாஜகவில் உள்ள முக்கிய பொறுப்புகள், கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல, கேரளாவில் மோடி மீது பற்று கொண்ட இஸ்லாமியர்களுக்கும் பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தற்போது இதே பாணியை தமிழகத்திலும் கடைபிடிக்க பாஜக இளைஞர் அணி திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்திலும் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க, இந்துக்கள் மட்டுமின்றி  கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை அதிக அளவில்  இளைஞர் அணிக்குள் கொண்டுவர பாஜக காய் நகர்த்தி வருகிறது.

இதுதொடர்பாக பாஜக இளைஞர் அணி அகில இந்திய துணைத் தலைவரும், கேரள மாநில பாஜக பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

கேரள பாஜகவில் தற்போது 30 சதவீத பொறுப்பு களில் கிறிஸ்தவர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அதேபோல, உலகம் போற்றும் விஞ்ஞானியான தமிழகத்தை சேர்ந்த அப்துல் கலாமை குடியரசுத் தலைவராக அமர்த்தி அழகுபார்த்த பாஜகவுக்கு இஸ்லாமியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடி வருகிறது. கேரளா போலவே, தமிழகத்திலும் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் தாங்களே விரும்பி பாஜகவில் இணைந்து வருகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி மற்றும் பாஜகவை பிற மதத்தினரும் வெகுவாக ஆதரிக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி.

விரைவில் பாதயாத்திரை

கேரளாவை சேர்ந்த அனுப்ஆன்டனி ஜோசப், பாஜக தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல தமிழகத்திலும் இளைஞர் அணியில் முக்கிய பொறுப்புகளுக்கு இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரை நியமிக்க ஆலோசனை நடந்து வருகிறது. இதற்காக கிறிஸ்தவ பங்குத் தந்தைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கேரளாவில் நடத் தப்பட்டதுபோல, தமிழகத்திலும் விரைவில் இளைஞர் அணி பாதயாத்திரை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x