கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு

கருணாநிதி உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு மறுப்பு
Updated on
1 min read

 திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க தமிழக அரசு சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி காந்தி மண்டபம் அருகே இடம் ஒதுக்கியுள்ளது.

இது குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இன்று (7.8.2018) தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கட்சித்தலைவர் மு.க. ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, டி.ஆர். பாலு, முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி, முரசொலி செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அந்த சந்திப்பின்போது முன்னாள் தமிழ்நாடு முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டபேரவை உறுப்பினருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை எனவும், மருத்துவர்கள் தெரிவித்துள்ள இந்த அசாதாரண சூழ்நிலையில் தமிழ்நாடு முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலுள்ள ராஜாஜி ஹாலில் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செய்யும் பொருட்டு ஒதுக்கவும், காமராஜர் சாலையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அன்னாரை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கவும் கோரிக்கை வைத்தனர்.

அவர்களது கோரிக்கைகளை தமிழ்நாடு முதல்வர் பரிசீலனை செய்தார். இதனிடையில் கருணாநிதி மறைந்த செய்தியை அறிந்த தமிழ்நாடு முதல்வர் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பித்தார்.

காமராஜர் சாலையிலுள்ள மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும், அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.

அதற்கு மாறாக, சர்தார் வல்லபாய் படேல் பிரதான சாலை முகப்பில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு எதிரே, காந்தி மண்டபம், ராஜாஜி மணிமண்டபம் மற்றும் காமராஜர் நினைவகத்திற்கு அருகே, அவரை நல்லடக்கம் செய்வதற்கு ஏதுவாக இரண்டு ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்யத் தயாராக இருப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்'' என்று கிரிஜா வைத்தியநாதன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in