Published : 28 Aug 2014 10:38 AM
Last Updated : 28 Aug 2014 10:38 AM

ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளையை அரசு அனுமதிக்கக் கூடாது: ராமதாஸ்

மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகட்டணம் 10 முதல் 20 % வரை உயர்த்தப்படுவதாகவும், இக்கட்டண உயர்வு வரும் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது. பயணிகளை பெரிதும் பாதிக்கும் இக்கட்டண உயர்வு கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பேரூந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் கட்டணம் எந்தவித ஒழுங்குமுறைக்கும் உட்படாமல் விருப்பம்போல உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு குறைந்தது இரு முறை கட்டணத்தை உயர்த்துவதை ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலும், கடந்த மே மாதத்திலும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இப்போது ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக கட்டணம் உயர்த்தப் பட்டிருக்கிறது. புதிதாக அறிவிக்கப்பட்ட கட்டணங்களின்படி சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல ஆம்னி பேரூந்தில் ரூ.660 வசூலிக்கப்படவுள்ளது. அரசுப் போக்குவரத்துக்கழக சொகுசுப் பேரூந்துகளில் சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.295 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், தனியார் ஆம்னி பேரூந்துகளில் அதைவிட 122 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிப்பது எந்த வகையில் நியாயம்?

அதுமட்டுமின்றி, தீபாவளி திருநாள் காலத்தில் மேலும் 30 முதல் 40% கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படும் என்றும் ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதேபோல், வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தால் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதும் சில பேரூந்துகளில் வழக்கமாக உள்ளது. திருவிழாக் காலங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ பேரூந்துகளை இயக்குவதற்கான செலவுகள் அதிகரிக்காத நிலையில், பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு பயணக் கட்டணத்தை உயர்த்துவது நேர்மைக்கேடானது ஆகும்.

டீசல் விலை உயர்வு, காப்பீட்டுக்கட்டணம் அதிகரிப்பு, சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என ஆம்னி பேருந்துகட்டண உயர்வுக்காக முன்வைக்கப்படும் காரணங்களில் ஓரளவு நியாயம் இருக்கத் தான் செய்கிறது. அதற்காக ஒரே ஆண்டில் 30 முதல் 50% வரை கட்டணத்தை உயர்த்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். விருப்பம் போல கட்டணத்தை உயர்த்திக் கொள்ளும் அதிகாரத்தை ஆம்னி பேருந்துஉரிமையாளர் சங்கத்திற்கு யார் அளித்தது? என்பது தெரியவில்லை.

ஆம்னி பேரூந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதுமட்டுமின்றி, ஆம்னி பேரூந்துகளின் ஆதிக்கம் கடந்த பத்தாண்டுகளாகத் தான் அதிகரித்துள்ளது. அரசுப் பேரூந்துகள் மிக மோசமாக பாராமரிக்கப்படுவதும், குறித்த காலத்தில் பேரூந்துகள் இயக்கப்படாததும் இதற்கு காரணமாகும். அவ்வகையில் ஆம்னி பேரூந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காததுடன் அவற்றின் ஆதிக்கம் பெருகுவதற்கும் அடிப்படைக் காரணமாக இருந்தது தமிழக அரசு தான்.

மக்களுக்கான பொதுப்போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆம்னி பேரூந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்கக்கூடாது. தானிகளுக்கான (ஆட்டோ) கட்டணத்தை கூட அவற்றை இயக்குவதற்கான செலவுகளின் அடிப்படையில் அரசு நிர்ணயிக்கும் நிலையில், ஆம்னி பேரூந்துகளுக்கான கட்டணமும் அதேமுறையில் அரசால் நிர்ணயிக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும். எனவே, தனியார் பேருந்துகட்டண ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்து ஆம்னி பேரூந்துகளின் கட்டணத்தை முறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x