Published : 06 Aug 2018 06:22 PM
Last Updated : 06 Aug 2018 06:22 PM

அத்துமீறுகிறார் பொன் மாணிக்கவேல்: அறநிலையத்துறை ஊழியர்கள் புகார்

காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத்திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடப்பதாக அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதிமன்றத்தால் சிறப்பாக நியமிக்கப்பட்டார். சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்.

அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங்கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார். இதுகுறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆளுநர் தனபால் புகார் அளித்தார்.

இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது. இதையடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்.

இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.

அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை.

சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படையிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் குமபலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது.

பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது.

விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது.

குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.''

இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ஸ்ரீதரன் பதிலளித்தார்.

பொன் மாணிக்கவேல் மீது என்ன தவறு உள்ளது?

அவர் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை.

அறநிலையத்துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

செக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை.

இணையதள முன்பதிவில் பலகோடி முறைகேடு என்கிறார்களே?

இது திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான செய்தி. இன்று பரிமாற்றம் எல்லாம் ஆன்லைனில் நடக்கிறது. இதில் ஒரு ரூபாய்கூட இழப்பு கிடையாது.

இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு கவிதா கைது என்றவுடன் செய்தியாளர்களைச் சந்திப்பது ஏன்?

கைது நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியுள்ளோம், ஒரு கட்டத்தில் நாங்கள் அமைதியாக இருந்தால் மக்களுக்கு அறநிலையத்துறை மீதே தவறான நம்பிக்கை ஏற்பட்டு விடும் என்பதால் தற்சமயம் சந்திக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலை தொடர்ந்தால் கூடிய விரைவில் எங்கள் நிலையை விளக்கி சென்னையில் பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம்.

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்படுவதை வரவேற்கிறீர்களா?

சிபிஐ வசம் வழக்கு மாற்றப்பட்டால் நேர்மையான முறையில் விசாரணை நடக்கும் என்று நம்புகிறோம்.

ஏன் அறநிலையத்துறை மீது இவ்வளவு பிரச்சனைகள்?

இந்தத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

இவ்வாறு ஸ்ரீதரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x