Published : 23 Aug 2018 10:12 AM
Last Updated : 23 Aug 2018 10:12 AM

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்க வேண்டும் - உயர் நீதிமன்ற மூன்றாவது நீதிபதி தீர்ப்பு

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள சுமார் 58.17 ஏக்கர் அரசு புறம் போக்கு நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக் கழகம், அரசுக்கு சொந்தமான 58.17 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அந்த நிலத்தை கையகப்படுத்த அரசு முயன்றது. இதை எதிர்த்து சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கை முதலில் விசாரித்த தனி நீதிபதி, “உரிய இழப்பீட்டைப் பெற்றுக் கொண்டு அந்த ஆக்கிரமிப்பு நிலத்தை சாஸ்த்ரா பல் கலைக்கழகத்துக்கே வழங்கலாம்” என தீர்ப்பளித்தார். ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

தவறான முன்னுதாரணம்

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகளில் ஒருவரான நூட்டி ராமமோகனராவ், “சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித் துள்ள நிலத்துக்கு ஈடாக ரூ. 10 கோடியைப் பெற்றுக் கொண்டு அந்த நிலத்தை அவர்களிடமே ஒப்படைக்கலாம்” என தீர்ப்பளித்தார். ஆனால் மற்றொரு நீதிபதியான எஸ்.எம்.சுப்ரமணியம்,”பல கோடி பெறுமானமுள்ள அரசு சொத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்களிடமே திருப்பி ஒப்படைப்பது என்பது தவறான முன்னு தாரணமாகி விடும். எனவே அந்த சொத்தை வேலி போட்டு பாதுகாப்பதுடன் மீட்பதற்கான நட வடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டு இருந்தார்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பினைப் பிறப்பித்ததால் இந்த வழக்கு விசாரணை மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் முன்பாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து வைத்துள்ள அரசு நிலத்தை உடனடியாக தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x