Published : 23 Aug 2018 09:43 AM
Last Updated : 23 Aug 2018 09:43 AM
மெரினா கடற்கரை சாலையில் அமைக்கப்படவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவுக்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் உயரிய லட்சியம், சிறப்புகளை நினைவுகூரும் வண்ணம் அவரது நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி தொடங்கப்பட்டு, டிசம்பர் 31-ம் தேதி திண்டுக்கல்லில் விழா நிறைவு பெற்றது.
இந்த விழாக்களில் பங்கேற்ற முதல்வர் கே.பழனிசாமி, அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பேரவையில் முதல்வர் அறிவிப்பு
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னையில் நினைவு வளைவு அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு ஜூன் 28-ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார்.
அந்த அறிவிப்பின்படி, சென்னை காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) உள்ள பொதுப்பணித் துறை அலுவலகம் அருகில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு அமைக்கப்படுகிறது. இதற்கு முதல்வர் கே.பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) காலை அடிக்கல் நாட்டுகிறார்.
விழாவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
இந்த நூற்றாண்டு நினைவு வளைவு, அழகிய கலைநயத்துடன் கூடிய சிற்ப வேலைபாடுகளுடன் 66 அடி அகலம், 52 அடி உயரமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT