Published : 27 Aug 2018 02:26 PM
Last Updated : 27 Aug 2018 02:26 PM

“கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாக கூறினார்; அதனை சிலர் தடுத்தனர்”: மு.க.அழகிரி குற்றச்சாட்டு

திமுகவில் தம்மை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருணாநிதி மறைந்து ஒருவாரம் முடியும் முன்பே சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்துடன் அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி, கட்சி ரீதியாக திமுகவில் தனக்கு ஆதங்கம் இருப்பதாகவும், அதனை நேரம் வரும்போது தெரிவிப்பேன் எனவும் கூறியிருந்தார். இதையடுத்து, வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி தம் ஆதரவாளர்களைத் திரட்டி கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடத்தப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் அழகிரி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். தொடர்ந்து திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் எதிரான கருத்துகளையும் கூறி வருகிறார்.

இந்நிலையில், மதுரையில் மு.க.அழகிரி திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எட்டு ஆண்டுகளாக இல்லாமல் இப்போது ஏன் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுகிறீர்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மு.க.அழகிரி, “அப்போது கலைஞர் உயிருடன் இருந்தார். கலைஞர் உயிருடன் இருந்தபோது என்னை திமுகவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறினார். ஆனால், அந்த முடிவை சிலர் தடுத்துள்ளனர். கலைஞர் இப்போது இல்லை. திமுகவை காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என தெரிவித்தார்.

மேலும், தமது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரணி குறித்து கூறிய அழகிரி, “தொண்டர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, எனது தலைமையில் செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதிப் பேரணி நடைபெற இருக்கிறது. அமைதிப் பேரணியில் கலந்துகொள்ள அனைத்து தொண்டர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இது தொண்டர்களின் முயற்சிதான். என் தலைமையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தான் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்” என கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x