Published : 28 Aug 2018 11:56 AM
Last Updated : 28 Aug 2018 11:56 AM

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் இதனை அறிவித்தார். இதையடுத்து, மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இரங்கல் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

தீர்மானம் : 1

கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல்

தமிழினத்தின் ஒப்பற்ற தலைவர், ஓயாத சமூகநீதிப் போராளி, பகுத்தறிவுத் தலைமகன், சுயமரியாதைச் சுடர், அண்ணாவின் அருமைத் தம்பி, தமிழ்நாட்டு மக்களின் சமூக, கல்வி, மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகவும் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் இன - மொழி எழுச்சிக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துக் கொண்ட கருணாநிதி, 07.08.2018 அன்று மீளாத் துயரில் ஆழ்த்திப் பிரிந்து விட்டார்.

புதுயுகப் படைப்பாளி, கவிஞர், இலக்கிய ஆசான், திரைக்கதை - வசனகர்த்தா, கட்டுரையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், மூத்த பத்திரிகையாசிரியர், சங்க இலக்கியங்களின் சாறுப் பிழிந்து சாமான்யருக்கும் கொண்டு சேர்த்த சாதனையாளர், விவேகமான நகைச்சுவையாளர், தர்க்கவியல் அடிப்படையிலான விவாதத்திறன் படைத்தவர் உள்ளிட்ட எண்ணற்ற பேராற்றலுக்குச் சொந்தக்காரர் கருணாநிதி.

அவர் கொண்ட கொள்கைகள், கோட்பாடுகள், லட்சியங்கள்,தொலைநோக்குப் பார்வை மற்றும் அணுகுமுறைகள் திமுகவின் கலங்கரை விளக்கமாக என்றென்றும் வழிகாட்டிக்கொண்டு இருக்கும் என்பதை பொதுக்குழு பதிவு செய்து கொள்கிறது. ஓய்வறியாத் தலைவராக தனது 93 வயது வரையில் மாபெரும் இயக்கத்திற்காக அல்லும் பகலும் அயராமல் அரும்பாடுபட்ட கருணாநிதி வகுத்துத் தொகுத்துத் தந்திருக்கும் பாதையில், திமுக தொடர்ந்து மக்கள் பணியாற்றி வெற்றி நடைபோடும் என்பதையும், அவர் விரும்பியபடி கழகத்தை அப்படி வீறுநடை போடச் செய்வதே நாம் ஒவ்வொருவரும் அவருக்குச் செலுத்திடும் அன்புக் காணிக்கை என்பதையும், தமிழ்ப் பெருமக்களுக்கு உறுதிபடத் தெரிவித்து, இந்தப் பொதுக்குழு கனத்த இதயத்துடனும், கண்ணீர்ப் பெருக்குடனும் கருணாநிதிக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 2

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவிற்கு இரங்கல்

கருணாநிதியின் பார்வையில் வல்லவராகவும், நல்லவராகவும், மூன்று முறை இந்தியப் பிரதமராகவும், கருணாநிதி பெரிதும் விரும்பிச் சுட்டிக்காட்டிய தமிழக உரிமைகளைத் தவறாமல் நிலைநாட்டியவராகவும், இந்தியாவை அடுத்த உயரத்திற்கு முன்னேற்றிட தங்க நாற்கர சாலை போன்ற வளர்ச்சிக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவராகவும் திகழும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 16.08.2018 அன்று காலமானார் என்ற துயரச் செய்தியினை, இந்தப் பொதுக்குழு மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்து, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

நாட்டின் பன்முகத் தன்மையைக் காப்பாற்றுவதற்காக, பிரதமர் பதவியிலிருந்த போதும் அதற்கு முன்னரும் உணர்வுப்பூர்வமாகப் பாடுபட்ட வாஜ்பாய், அண்ணாவுடனும், கருணாநிதியுடனும் நெருங்கிய நட்பைப் போற்றிய தேசியத் தலைவர். வளமான கற்பனை செறிந்த கவிஞர், நிறைவான நாடாளுமன்ற அனுபவம் கொண்டவர், மாற்றார் கருத்துகளை மதித்துப் போற்றும் மாண்புடையவர், ஆட்சியிலிருப்போர் மதச்சார்பற்ற இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்ற பண்பட்ட எண்ணம் கொண்டவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவு வளர்த்தவர், கார்கில் கதாநாயகர், வெற்றிகரமாக பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தி வல்லரசுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த பிரதமர் என்று பல்வேறு அருமை பெருமைகளுக்குச் சொந்தக்காரரான வாஜ்பாயின் மறைவு, நாட்டிற்கும், நாட்டின் பன்முகத்தன்மைக்கும் மிகப்பெரிய இழப்பு என்று இந்தப் பொதுக்குழு மிகுந்த மனவருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 3

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவிற்கு இரங்கல்

மக்களவை சபாநாயகராகவும், பத்துமுறை மக்களவை உறுப்பினராகவும் நாட்டுக்குப் பல முனைகளிலும் பயன்தரும் வகையில் பணியாற்றிய மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியும், பொதுவுடைமைப் பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சோம்நாத் சாட்டர்ஜி 13.08.2018 அன்று மறைவெய்தியதற்கு, இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொன்விழாவில் கருணாநிதியின் அழைப்பினை ஏற்று, ஆர்வமுடன் பங்கேற்று தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்தவர். மக்களவை சபாநாயகராக குன்றி மணியளவும் நடுநிலை தவறாமல் செயல்பட்டு, அனைத்துக் கட்சி மக்களவை உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். நாடாளுமன்றத்தின் வளமான மரபுகளையும், அரசியல் சட்டத்தையும் நிலைநாட்டும் வகையில், மக்களவை உறுப்பினராகவும், சபாநாயகராகவும் செயல்பட்டு ஜனநாயக நெறிகளைப் பாதுகாத்தவர். அறிவியல் ரீதியான சமூக சிந்தனையாளர். உழைக்கும் அடித்தட்டு மக்களின் நலனுக்காவும் முன்னேற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியின் மறைவு, நாடாளுமன்றத்திற்கும், இடதுசாரி எண்ணங்களின் செழுமைக்கும், ஜனநாயகத்திற்கும் பேரிழப்பு என்று இந்தப் பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 4

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மறைவுக்கு இரங்கல்

தமிழ்நாட்டில் இருமுறை ஆளுநராகவும், பஞ்சாப் முதல்வராகவும், மத்திய அரசின் அமைச்சராகவும், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளுநராகவும், மக்கள் பணியாற்றிய சுர்ஜித் சிங் பர்னாலா, 14.01.2017 அன்று மறைவெய்திய சோக நிகழ்வுக்கு, பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

மாநில அரசுகளைக் கலைக்கும் அரசியல் சட்டப் பிரிவு 356-ன் கீழ், பிற்போக்கு சக்திகளின் சூழ்ச்சிக்கு இறையாகி, கொல்லைப்புற வழியாகக் கழக அரசைக் கலைக்க, முன்னாள் பிரதமர் சந்திரசேகர் அறிக்கை கோரிய போது, இந்திய அரசியல் சட்டநெறிகளைத் தூக்கிப் பிடித்திடும் வகையில், நேர்மைக்கும் நியாயத்திற்கும் பெயர் பெற்ற சுர்ஜித் சிங் பர்னாலா கோரிய அறிக்கையைக் கொடுக்க மறுத்தவர். அறிக்கை தர மறுத்த காரணத்தால், பீஹார் மாநிலத்திற்கு மாற்றப்பட்ட போது, ஆளுநர் பதவியையே தூக்கி எறிந்தவர். அரசியல் சட்டப் பிரிவு 356-ஐ தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்ற கொள்கை உறுதிக்காக குறிப்பாக,சட்டப்படியும், ஜனநாயக வழிகாட்டுதல்களின்படியும் நடந்து கொண்டிருந்த திமுக ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக தனது பதவியை இழந்தவர். 1991 பொதுத் தேர்தலில் கழகத்தை ஆதரித்துப் பரப்புரை செய்தவர். வாழ்நாள் முழுதும் அரசியல் பண்பாடு போற்றிய சுர்ஜித்சிங் பர்னாலாவின் மறைவினால், அரசியல் சட்டம் தனது நேர்மையான பாதுகாவலர்களில் ஒருவரை இழந்திருக்கிறது என்று பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 5

ஐநா.மன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கோஃபி அன்னான் மறைவுக்கு இரங்கல்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளராக இருந்தவரும், நோபல் பரிசு பெற்றவருமான கோஃபி அன்னான் 18.08.2018 அன்று மறைவெய்தியதற்கு, இந்தப் பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

இரு முறை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராகப் பணியாற்றி, உலக அமைதிக்காக ஆர்வத்துடன் பாடுபட்டவர் கோஃபி அன்னான். ஐக்கிய நாடுகள் சபை நிர்வாகக் கட்டமைப்பில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவரும், பல்வேறு அமைதிப் பேச்சு வார்த்தைகளில் அக்கறையுடன் பங்கேற்றவரும், ஐக்கிய நாடுகள் சபையின் ஆயிரம் ஆண்டுகளுக்கான செயல் நோக்கம் அறிவிக்கப்பட அடிப்படைக் காரண கர்த்தாவாக இருந்தவருமான கோஃபி அன்னான் மறைவு ஐக்கிய நாடுகள் சபைக்கும், மனித உரிமைகளுக்கும், உலக அமைதிக்கும் பேரிழப்பாகும் என்று பொதுக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6

கருணாநிதியின் மறைவுச் செய்தி கேட்ட ஆழ்ந்த சோகத்திலும், அதிர்ச்சியிலும் மறைவெய்தியோருக்கு இரங்கல்;அவர்தம் குடும்பத்தார்க்கு உதவிநிதி

கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவரது உடல் நலம் படிப்படியாகப் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்தும் கருணாநிதியின் இன்னுயிர் பிரிந்தது என்ற செய்தி கேட்டும், அதிர்ச்சியடைந்த திமுகவினர் 248 பேர் மறைவெய்தியிருக்கிறார்கள். வாழ்நாளில், தங்களின் உயிருக்குக்கும் மேலாக உயர்த்தி நேசித்த, தங்களின் குடும்பத் தலைவர் கருணாநிதி மறைந்து விட்டார் என்ற துயரத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மறைவெய்திய திமுகவினர் குடும்பத்தினர் அனைவருக்கும் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

கருணாநிதி மறைவினையொட்டி உயிரிழந்த 248 தொண்டர்களின் குடும்ப உதவிநிதியாக தலா 2 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 கோடியே 96 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவது என்று பொதுக்குழு தீர்மானிக்கிறது.

தீர்மானம்: 7

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு இரங்கல்

சுற்றுப்புறச்சூழலுக்கும், மக்களின் சுகாதாரத்திற்கும் மிகவும் கேடு விளைவித்து ஆபத்தை ஏற்படுத்திடும் வகையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தனியார் ஆலையை மூடக்கோரி, தூத்துக்குடி மக்கள் ஒருங்கிணைந்து அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நூறு நாட்களுக்கும் மேல் நடைபெற்ற போராட்டத்தைச் சீர்குலைத்திட, 22.05.2018 அன்று எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாமல், திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி மக்களில் 13 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டன. விதிகளுக்கு முரணாக, துப்பாக்கிச் சூட்டில் சிறப்புரகத் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. அதிகார துஷ்பிரயோகத்தால் நடைபெற்ற மனிதாபிமானமற்ற, அராஜகமான அந்தத் துப்பாக்கிச் சூட்டில் மாண்ட 13 பேருக்கும் பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 8

கேரள மாநில கனமழை, பெருவெள்ளத்தின் காரணமாக உயிரிழந்தோருக்கு இரங்கல்

வரலாறு காணாத கனமழை மற்றும் பெரு வெள்ளம் சூழ்ந்து கேரள மக்களின் வாழ்வாதாரத்தையும், உயிரையும் கொடுமையான முறையில் பறித்திருக்கிறது. அதிதீவிரப் பேரிடரினால் அம்மாநிலத்தில் உள்கட்டமைப்பும், வீடுகளும், மிகப்பெரும் சேதாரத்திற்குள்ளாகி, மக்கள் இயல்பு நிலைமைக்குத் திரும்ப முடியாமல் தவித்துத் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களை எல்லா வகையிலும் நிலைகுலைய வைத்திருக்கும் இந்தப் பேரிடரால், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெருமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்குண்டு 373 பேர் இறந்திருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 400-ஐ தொடும் என்றும் வெளிவந்துள்ள துயரம் கப்பிய செய்தியை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்யும் பொதுக்குழு, பேரிடரில் சிக்கி உயிரிழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அவர்தம் குடும்பத்தார்க்கு இதயபூர்வமான ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம்: 9

பன்முக ஆளுமை கருணாநிதிக்குப் பாரத ரத்னாவிருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்த வேண்டும்

போட்டியிட்ட 13 முறையும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றும், இருமுறை சட்ட மேலவை உறுப்பினராக இருந்தும் மொத்தம் 60 ஆண்டுகள் உறுப்பினராக, தமிழகத்தில் இதுவரை யாரும் உருவாக்காத சரித்திரத்தைப் படைத்தவர் கருணாநிதி. அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப் பணித்துறை அமைச்சராகவும், பிறகு ஐந்து முறை, தமிழகத்தின் எந்த முதல்வரும் பதவி வகித்திடாத அளவுக்கு மொத்தம் 19 ஆண்டுகள் நீண்ட காலம் தமிழ்நாடு முதல்வராகவும் இருந்து அரும்பணி ஆற்றியவர் கருணாநிதி.

தமிழக அரசியலிலும், தேசிய அரசியலிலும் யாராலும் தவிர்த்திட இயலாத தலைவராகவும்,திராவிடப் பேரியக்கத்தின் கொள்கைகளை, எள்ளளவும் குறைந்து விடாமல், இறுதி வரை இதயத்தில் ஏந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை உள்ள இந்தியத் தமிழர்களுக்காக மட்டுமின்றி, உலகெங்கும் பரவியிருக்கும் தமிழினத்தின் உரிமைகளுக்காகவும், அவர்தம் உன்னதமான நலனுக்காகவும், ஆட்சி அதிகாரத்தையும் சீரிய செல்வாக்கையும் பயன்படுத்தி, சிறப்பான திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்தவர் கருணாநிதி.

கருணாநிதி தலைசிறந்த நிர்வாகியாக முதல்வராக இருந்த போது உருவாக்கிய குடிசை மாற்று வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், நுகர்பொருள் வாணிபக் கழகம், நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நாட்டுக்கே முற்போக்கான முன்னோடித் திட்டங்களாகும். விவசாயிகள் - நெசவாளர்கள் - மீனவர்கள் என்ற மும்முனை வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களைத் தந்தவர்.

தொழில் வளர்ச்சிக்கும், கணினிக் கல்விக்கும் அரும்பாடு பட்டவர் கருணாநிதி. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தனிமனித வருவாய் உயர்வுக்கும் வித்திட்டவர். சாதி மத வேறுபாடுகளை ஒழித்துச் சமூக நல்லிணக்கம் காண ஓயாது உழைத்தவர். விளிம்பு நிலைப் பிரிவினரான அருந்ததியர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் ஆகியோரது நல்வாழ்விலும் முன்னேற்றத்திலும் சீரிய கவனம் செலுத்தியவர். மாநிலத்தின் அனைத்துத் துறைகளிலும் நீடித்த நிலையான வளர்ச்சியிலும், முழுமையான முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டியவர் கருணாநிதி.

நேரு முதல் இந்தியாவின் அனைத்துப் பிரதமர்களுடனும் நயத்தக்க நாகரிகமான நட்பையும், மாற்றுக் கருத்துகள் கொண்டிருந்தாலும் அரசியல் மேன்மையையும் பண்பாட்டையும் என்றென்றும் போற்றி வளர்த்த கருணாநிதிக்கு இணையான இன்னொரு தலைவர் இனிவரும் எந்த நூற்றாண்டிலும் கிடைப்பது அரிது என்று சொல்லுமளவுக்கு, அழிக்க முடியாத ஆழமான முத்திரை பதித்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

குடியரசுத் தலைவர்களை உருவாக்குவதிலும், மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைவதிலும், நாட்டின் பன்முகத் தன்மையைப் பேணிக் காப்பதிலும் முனைப்புடன் செயலாற்றியவர். ஆக்கப்பூர்வமானதும் வலிமையானதுமான மாற்று அணிகளை தேசிய அரசியலிலும், மாநில அரசியலிலும் உருவாக்குவதிலும், நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் போற்றிக் காப்பதிலும் அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் கருணாநிதி.

சட்டப்பேரவைப் பொன்விழாவும் கண்டார், திமுக தலைவராகவும் பொன்விழா கண்டார். சட்டப்பேரவையில் கன்னிப் பேச்சிலிருந்து, அமைச்சர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்துப் பொறுப்புகளிலும் ஆற்றிய பேருரைகள் வரை அனைத்திலும் சட்டப்பேரவையின் மாண்புகளையும், மரபுகளையும் இம்மியளவும் வழுவாமல் பேணிக் காத்த கருணாநிதி, மக்களாட்சித் தத்துவத்தின் மாபெரும் சிற்பியாக விளங்கி சட்டப்பேரவையில் விவாதங்களில் எப்போதும் தென்றல் தவழ்ந்திடவும், ஒளிபரவிடவும், வெப்பம் தவிர்க்கப்படவும் உறுதுணையாக விளங்கினார். முதல்வராக இருந்தபோது எதிர்க் கட்சிகளையும், எதிர்க்கட்சி வரிசையில் வீற்றிருந்தபோது ஆளுங்கட்சியையும் அனுசரித்து அரவணைத்துச் சென்றவர் கருணாநிதி.

கருணாநிதி அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களைக் காப்பதிலும், ஜனநாயக மாண்புகளைப் போற்றுவதிலும், நாட்டு நலனை முன்னிலைப் படுத்துவதிலும் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். ஏழை எளியோர், பாட்டாளி வர்க்கத்தினர், நடுத்தரப்பிரிவினர், ஒடுக்கப்பட்டோர், உதாசீனப்படுத்தப்பட்டோர் மீதும், மகளிர் முன்னேற்றத்திலும் தனித்தன்மை வாய்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

45 வயதிலேயே முதல்வராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தில் விவேகம் - வேகம் காட்டியதுடன், முதிர்ந்த 82 வயதிலும் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்று பழுத்துக் கனிந்த முதிர்ச்சியான அனுபவத்தை மாநில நிர்வாகத்திற்குத் தந்தவர். நிர்வாகத்திற்கு உயிரையும், உணர்வையும் ஊட்டியவர் கருணாநிதி. தாய்மொழியான தமிழ் மொழியை முதன்மைப்படுத்துவதில் தணியாத ஊக்கம் கொண்டவர் கருணாநிதி.

இணையிலா எழுத்தாளர், ஏற்றமிகு பேச்சாளர், நாடு போற்றும் நல்ல நிர்வாகி என்ற தனித்தன்மைகளின் தகுதிமிக்க தொகுப்பாகவும், நிறைவான மனித நேயம், நேர்த்தியான கண்ணோட்டம் போன்ற நற்குணங்கள், ஆக்கப்பூர்வமான அணுகுமுறைகளின் அரிய பெட்டகமாகவும், அடி முதல் நுனி வரை வலிவும்,பொலிவும் மிக்க கட்டமைப்பினை கழகத்திற்கு உருவாக்கித் தந்த செயலூக்கம் கொண்ட தலைவராகவும் விளங்கிய கருணாநிதிக்கு, பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு பெருமைப்படுத்திட வேண்டும் என்பது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத் தமிழர்களின் ஒருமித்த விழைவாகும் என்பதால், மத்திய அரசு அதனை நிறைவேற்றித்தர வேண்டும்.

இவ்வாறு திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x