Published : 12 Apr 2014 09:15 AM
Last Updated : 12 Apr 2014 09:15 AM

பாபர் மசூதி இடிப்பை ஆதரித்துகுரல் கொடுத்தவர் ஜெயலலிதா: செஞ்சி கூட்டத்தில் ஸ்டாலின் புகார்

400 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிப்புக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தவர் கலைஞர். ஆனால் அதை ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜெயலலிதா என்று செஞ்சியில் வெள்ளிக்கிழமை மாலை ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார்.

ஆரணி தொகுதிக்குட்பட்ட செஞ்சியில் திமுக வேட்பாளர் சிவாநந்தத்தை ஆதரித்து வெள்ளிக்கிழமை மாலை திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது; 400 ஆண்டுகால பழமைவாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடன் இந்தியாவில் இதை எதிர்த்து முதல் குரல் கொடுத்தவர் கருணாநிதி. ஆனால் ஆதரித்து குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. திமுக 35 இடங்களில் போட்டியிடுகிறது.

அதில் 2 இடம் முஸ்லிம்களுக்கு. மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என 4 வேட்பாளர்கள் முஸ்லிம்கள். ஆனால் 40 இடங்களில் போட்டியிடும் அதிமுகவில் ஒருவர் மட்டுமே முஸ்லிம். பாஜக கூட்டணியில் அதுவும் இல்லை என்பதை நீங்கள் எண்ணி பார்க்கவேண்டும்.

ஏதோ ஒரு திடலில் மாலை 5 மணிக்கு ஜெயலலிதா பேச வருகிறார் என்றால் பக்கத்து மாவட்டத்திலிருந்து காலை 10 மணிக்கே இந்த வெயிலில் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்து அழைத்து வருகிறார்கள். செஞ்சியில் பேசினாலும், கன்னியாகுமரியில் பேசினாலும் மாலை 6 மணிக்குள் சென்னைக்கு செல்லவேண்டும். ஏனெனில் இரவில் ஹெலிகாப்டர் பறக்காது.

முதுமலை காட்டில் உள்ள யானைக் குட்டிக்கு வாழைப்பழம் கொடுக்கும்போது குட்டியானை முட்டிதள்ளியது. தமிழக மக்களை பார்க்காமல் எங்களை ஏன் பார்க்க வருகிறீகள் என யானை முட்டியது போலும். ஐந்தறிவு உள்ள யானைக்கே இவ்வளவு என்றால் ஆறு அறிவு கொண்ட நாம் ஜெயலலிதாவுக்கு பாடம் புகட்ட வந்துள்ள தேர்தல்தான் இது என்று ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x