Published : 24 Aug 2014 01:16 PM
Last Updated : 24 Aug 2014 01:16 PM

குப்பைக் கிடங்கை அகற்றாவிட்டால் அலுவலகத்தை அங்கு மாற்ற வேண்டியிருக்கும்: மயிலாடுதுறை நகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பான வழக்கில் நீதிமன்றத் தில் அளித்த வாக்குறு தியை நிறைவேற்றாவிட்டால், அந்தக் குப்பைக் கிடங்குக்கு அருகி லேயே அலுவலகத்தை மாற்ற வேண்டியிருக்கும் என்று மயிலாடு துறை நகராட்சி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக மயிலாடு துறையைச் சேர்ந்த எல்.ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ‘மயிலாடுதுறை நகராட்சி 7-வது வார்டில் உள்ள இடத்தில் குப்பை கிடங்கு செயல்படவும், அந்தக் குப்பை கிடங்கை மேலும் விரிவாக்கம் செய்யவும் நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்த மனு மீது விசாரணை நடத்திய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அண்மையில் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:

இந்த பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு 11 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், பதில் மனு தாக்கல் செய்யவே 9 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், 3 மாதத்துக்குள் குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று 2012-ம் ஆண்டு இதே நீதிமன்றம் கூறியுள்ளது. மாசுக் கட்டுப்பாடு வாரியம் சுட்டிக்காட்டிய குறைபாடுகளை களையவும், குப்பைக் கிடங்குக்கான புதிய இடத்தை கண்டறியும் வசதியாக 8 வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்து 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறைபாடுகளை நிவர்த்தி செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி ஆணையர் பொறுப் பேற்றுள்ள தாக அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனினும் நீதிமன்றத்தில் இதுவரை அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்பட வில்லை. இதற்கிடையே இதுவரை எந்தப் பணியும் நடக்கவில்லை என மாசுக் கட்டுப்பாடு வாரிய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிக்கு மாறாக நகராட்சி ஆணையர் நடந்துள்ளார் என்பது தெரிகிறது. இந்நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கும்வரை குப்பைக் கிடங்கு உள்ள இடத்துக்கு அருகிலேயே நகராட்சி ஆணையர் அலுவலகத்தையும் இடமாற்றம் செய்து கொள்ளும்படி நாங்கள் உத்தரவிட்டிருக்கலாம். எனினும் இதுபற்றி நடவடிக்கை மேற்கொள்ள நகராட்சி தரப்பு வழக்கறிஞர் 15 நாள் அவகாசம் கேட்டுள்ளார்.

அதன்படி நடவடிக்கை எடுக்க வில்லை எனில் நகராட்சி ஆணை யர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, குப்பைக் கிடங்குக்கு அருகிலேயே தனது அலுவல கத்தை மாற்றுவதற்கான ஏற்பாடு கள் பற்றி தெரிவிக்க வேண்டி யிருக்கும். இவ்வாறு உத்தரவில் கூறியுள்ள நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x