Last Updated : 22 Aug, 2018 11:52 AM

 

Published : 22 Aug 2018 11:52 AM
Last Updated : 22 Aug 2018 11:52 AM

நடப்பாண்டில் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை

இந்தாண்டில் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த‌ ஜூன் மாதம் முதல் ஜூலை வரை தென்மேற்குப் பருவமழை பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை இறுதியில் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை கடந்த மாதம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்தது. இதேபோல், கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டது. இதனால், இந்தாண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. அதிகபட்சமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் வந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.21 அடியாகவும், நீர் இருப்பு 93.80 டிஎம்சியாகவும் உள்ளது. நீர் திறப்பு விநாடிக்கு 65 ஆயிரம் கனஅடியாக உள்ளது. இந்தாண்டில் மேட்டூர் அணை மூன்றாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x