Published : 12 Aug 2018 07:29 PM
Last Updated : 12 Aug 2018 07:29 PM

காவிரி நதி நீர் வெளியேறும் போது செல்ஃபி எடுக்காதீர்: அமைச்சர் உதயகுமாரின் 7 அறிவுறுத்தல்கள்

காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் செல்ஃபி எடுத்தல் உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''கடந்த 9-ம் தேதி முதல் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 1,00,000 கன அடி வீதம் இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் எனவும், காவிரி ஆற்றுப்படுகைகளில் அமைந்துள்ள மாவட்டங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி அன்றே, காவிரி கரையோர மாவட்டங்களான தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து விரிவான சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது.

7 அறிவுறுத்தல்கள்

* காவிரி நதி நீர் கால்வாய்கள் மற்றும் பிற நீர் நிலைகளில் நீர் வெளியேறும் போது நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் செல்ஃபி எடுத்தல் உள்ளிட்ட பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* அணைகளிலிருந்து தண்ணீர் அதிகமாக வெறியேற்றப்படும் போது தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆற்றங்கரையில் குழந்தைகள் குளிக்கவும் மற்றும் விளையாடவும் அனுமதிக்கக் கூடாது எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* கால்நடைகளைப் பாதுகாப்பான இடங்களில் கட்டிவைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் அமைக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* பொதுமக்கள் மத்தியில் எந்தவித பீதியும் ஏற்படக்கூடாது என்பதையும், பாதிப்பிற்குள்ளாகும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றி நிவாரண முகாம்களில் தங்க வைத்திடவும் மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* மேட்டூர் அணை உயரம்-120.2 அடி, கொள்ளளவு- 93.79 டி.எம்.சி, வினாடிக்கு 1,30,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து-வினாடிக்கு 1,35,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஒலிப்பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

நடவடிக்கைகள்

* சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 359 மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 4 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

* மக்கள் மற்றும் வாகனங்கள் செல்லும் உயர்மட்ட பாலங்கள் தவிர ஆற்றின் குறுக்கே செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்கு தரைமட்ட பாலங்களிலும் எச்சரிக்கை பதாகைகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ளது.

* பல்துறை மண்டல குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் உதயகுமார் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x