Published : 07 Aug 2018 11:37 AM
Last Updated : 07 Aug 2018 11:37 AM

சிலை கடத்திய கும்பலை மடக்கிப் பிடித்த பொன் மாணிக்கவேல்: அம்மன் சிலை மீட்பு; 4 பேர் கைது

 சிலை திருட்டு கும்பல் காரில் அம்மன் சிலையைக் கடத்துவதாகக் கிடைத்த தகவலை அடுத்து போரூர் அருகே முகாமிட்டு அந்தக் காரை மடக்கிப் பிடித்தார் ஐஜி பொன் மாணிக்கவேல். அம்மன் சிலை மீட்கப்பட்டு 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னையிலிருந்து ஒரு கும்பல் அம்மன் சிலை ஒன்றைத் திருடி காரில் கடத்துவதாக ஆட்டோ டிரைவர்கள் சிலர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஆட்டோ ஓட்டுநர்கள் கூறிய தகவலை அடுத்து காரின் அடையாளம், அது செல்லும் பாதையைக் கணித்த போலீஸார் போரூர் அருகே காரம்பாக்கத்தில் காத்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு ஐஜி பொன் மாணிக்கவேலும் நேரில் வந்தார். அப்போது குறிப்பிட்ட கார் வந்தபோது போலீஸார் அதை மடக்கிப் பிடித்தனர். காரில் நான்கு நபர்கள் இருந்தனர். காருக்குள் சாக்குப்பைக்குள் மறைத்து வைக்கப்பட்ட சிலை ஒன்று இருந்தது.

அதைப் பிரித்துப் பார்த்தபோது தங்கத் தாலிக்கொடியுடன் கூடிய ஒன்றே முக்கால் அடி உயர ஐம்பொன் அம்மன் சிலை இருந்தது. சிலையைப் பறிமுதல் செய்த போலீஸார், கடத்தி வந்த கோபி, கணேஷ், யுவநாதன், சக்திவேல் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவள்ளூர் அருகே கோயிலில் வழிபாட்டில் இருந்த சிலையைத் திருடி அதை ரூ.50 லட்சத்துக்கு பேரம் பேசி விற்பதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. அவர்கள் எந்தக் கோயிலில் இந்த சிலையைத் திருடினர், நால்வரும் சிலை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களா? அவர்களிடம் சிலையை வாங்கிக்கொள்வதாக கூறியவர்கள் யார் என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலை கடத்தல் கும்பலைப் பிடிக்க போலீஸாருக்கு தகவல் கொடுத்து உதவிய 3 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சன்மானம் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x