Published : 12 Aug 2018 08:42 AM
Last Updated : 12 Aug 2018 08:42 AM

ஒவ்வொருமுறை படிக்கும்போதும் கம்பராமாயணம் புதிய, புதிய கருத்துகளை உணர்த்தும்- கம்பன் விழாவில் நீதிபதி ராமசுப்பிரமணியன் புகழாரம்

கம்பராமாயணத்தை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய, புதிய கருத்துகளை உணர்த்தும் என ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தெரி வித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் 44-வது ஆண்டு 3 நாள் கம்பன் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. சென்னை கம்பன் கழகத் தலைவர் இராம. வீரப்பன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஐதரா பாத் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், சாலமன் பாப்பையாவுக்கு கம்பர் விருது, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவுப் பரிசு, பேராசிரியர் வ.ஜெயதேவனுக்கு கம்பன் கழகத்தின் நிறுவனர் நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசு உட்பட மொத்தம் 19 பேருக்கு பல்வேறு விருதுகளை வழங்கினார்.

திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய, ‘உடன் பிறந்த தம்பியரும்; உடன் பிறவாத் தம்பியரும்’ என்ற நுாலை நீதிபதி இரா.சுரேஷ்குமாரும், ‘வழி வழி வள்ளுவம், மாக்கதையில் மனக்காயங்கள்’ எனும் இரண்டு குறுந்தகடுகளை சிலம்பொலி சு.செல்லப்பனும் வெளியிட்டனர்.

விழாவில் ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணி யன் பேசியதாவது:

கம்பராமாயணத்தில், கம்பன் செய்யாத புதுமையை, சென்னை கம்பன் கழகம் செய்துள்ளது. ராமாயணத்தில், இரண்டு தலை முறையினரைப் பற்றிய கதை உள்ளது. சென்னை கம்பன் கழகத் தில் மூன்று தலைமுறையினர் பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர். நான், 1977-ல், மாணவனாக இருந்த போது, கம்பன் கழகம் நடத்திய, ‘கம்பனும் திருவள்ளுவனும்’ என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசாக ரூ.250 பெற்றேன்.

வழக்கறிஞரான பின், இதே கம்பன் கழகத்தில், பேச்சாளரா னேன். தற்போது, நீதிபதியாக இருக்கிறபோதும், தலைமை ஏற்கிறேன்.

கடந்த 20-ம் நூற்றாண்டில் பேசப்பட்ட தலைமுறை உரிமை களைப் பற்றி கம்பன், வருணன் கதை வழியாக உணர்த்துகிறான். பல்லுயிர் பரவல் பற்றி, நலன் கதையில், ‘ஒரே அம்பில், இந்த கடலை நீ, கட்டியாக்கி விடுவாய்; ஆனால், அதில் உள்ள பல உயிர்கள், அத்துடன் மடியும். அதனால் கிடைக்கும் வெற்றியில் என்ன பயன்?’ என கேட்கிறான்.

வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பகுதியாக ‘கருடன் துதி’ என்னும் பகுதியை, கம்பன் படைத்து, அதில் மனித வாழ்வின் தத்துவங்களை உச்சமாக்கு கிறான். ‘கல்வி சிறந்த தமிழ்நாடு, இது கம்பன் பிறந்த தமிழ்நாடு, யாமரிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் யாங்கனுமே கண்டதில்லை’ என்று பல இடங்களில், கம்பனை உச்சத்தில் வைக்கிறான் பாரதி.

அதற்குக் காரணம், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், கம்பராமாயணம் புதிய புதிய கருத்துகளை உணர்த்துவதுதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

‘கம்பராமாயணத்தில் உணர்ச்சி மேலாண்மை’ என்ற தலைப்பில் ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு பேசும்போது, ‘‘தற்போதுள்ள இளைஞர்கள் மிகவும் புத்திக் கூர்மை உள்ளவர்கள். ஆனால், விரைவில் உணர்ச்சிவசப்பட்டு வருகிறார்கள். சின்ன காரணத் துக்கு பதற்றப்படுகிறார்கள்.

எல்லா இடங்களிலும் இருக் கும் சொல் பதற்றம் என்பது. முந் தைய தலைமுறை காத்திருந்து பழக்கப்பட்ட தலைமுறை. ஆனால், இன்று கணினி தொழில் நுட்பம் வளர்ந்து விட்டதால், இந்தத் தலைமுறை எங்கேயும் காத்திருக்க வேண்டிய நிலையில் இல்லை. உணர்ச்சிவசப்படும்போது குழப்ப மும், தடுமாற்றமும் ஏற்படுகிறது. இதை கம்பராமாயணத்தில் ராமன், சீதை, லட்சுமணன் பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்’’என்றார்.

நிகழ்ச்சியில், சென்னை கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன், செயலர் இலக்கிய வீதி இனியவன் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x