Published : 10 Aug 2014 01:22 PM
Last Updated : 10 Aug 2014 01:22 PM
திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவர் கள் சேர்க்கை இல்லாததால், இரண்டு அரசு தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், 10 பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்றி மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 1,186 அரசு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இதில் 857 அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்த கல்வி ஆண்டில் 25 ஆயிரத்து 78 மாணவர்கள் தொடக்கப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டினர். இதனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டைவிட குறைந்துவிட்டது.
கொடைக்கானல், சிறுமலை உள்ளிட்ட பல மலைக்கிராம பள்ளிகளுக்குச் செல்ல சாலை வசதியில்லை. அதனால், இப்பள்ளி களில் பணிபுரிய ஆசிரியர்களும் ஆர்வம் காட்டவில்லை. மாணவர்களும், காட்டு வழியாக பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதால் பெற்றோரும் குழந்தைகளை இப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை. அதனால், சிறுமலை அருகே வேளாம்பண்ணை, பழனி அருகே மீனாட்சி நாயக்கன்வலசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் முற்றிலும் மாணவர் சேர்க்கை நடக்கவில்லை. இந்த 2 பள்ளிகளிலும் தலா 2 மாணவர்களே படித்தனர். இதனால், இந்த 2 தொடக்கப் பள்ளிகளும் மூடப்பட்டன. இதையடுத்து, அந்த பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் அருகில் உள்ள பிற பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்.
இப்பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், ஜூனில் நடந்த கலந்தாய்வில் வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையே, மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்த மேலும் 10 பள்ளிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் போக்கு தொடர்ந்தால் கல்விக்கட்டணமாக ஆயிரக்கணக்கில் பணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். ஆகவே, மாணவர் சேர்க்கை குறையும் பள்ளிகளை கண்காணித்து குறைகளை நீக்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT