Last Updated : 18 Aug, 2018 10:59 AM

 

Published : 18 Aug 2018 10:59 AM
Last Updated : 18 Aug 2018 10:59 AM

தென்மேற்குப் பருவமழை தீவிரம்; வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றாலம், ஐந்தருவியில் குளிக்க 5-வது நாளாக தடை

 தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க ஐந்தாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் இதுவரை மழை சார்ந்த உயிரிழப்புகள் 324 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்திலும் கோவை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்றும் (சனிக்கிழமை) அங்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஐந்து நாட்களாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடிப்பதால் இந்த அருவிகளில் குளிக்க ஐந்தாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டது.

இதேபோல் மணிமுத்தாறு அணை அருகே உள்ள மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் 8 அணைகள் நிரம்பியுள்ளன. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் திறந்துவிடப்பட்ட உபரி நீர் தாமிரபரணி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x