Published : 29 Aug 2018 03:45 PM
Last Updated : 29 Aug 2018 03:45 PM

தவறான தொழில் செய்வதாக கைது செய்வோம்; போலீஸ் மிரட்டலால் தீக்குளித்த பெண் மரணம்: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

 

திருவேற்காடு காவல் நிலையத்தில் சாதாரண பக்கத்து வீட்டுச் சண்டையில் போலீஸார் மிரட்டியதால் அவமானமடைந்த பெண் ஸ்டேஷன் முன் தீக்குளித்தார். பெண் மரணமடைந்ததை அடுத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

திருவேற்காடு, செந்தமிழ் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன் (40). இவரது மனைவி ரேணுகா (34). இவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவரது வீடு சொந்த வீடு ஆகும். ரேணுகா தனது வீட்டின் அருகே கழிப்பறை ஒன்றைக் கட்டி வந்தார்.

இது பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அமிர்தவள்ளி என்பவர் இது குறித்து ஆட்சேபித்துள்ளார். இந்தப் பிரச்சினை நாளுக்கு நாள் வாய்த் தகராறு ஆகி போலீஸில் புகார் அளிக்கும் அளவுக்குச் சென்றது. நேற்று முன் தினம் தகராறு அதிகமாகவே, அமிர்தவள்ளி திருவேற்காடு காவல் நிலையத்தில் இது குறித்துப் புகார் அளித்துள்ளார்.

அமிர்தவள்ளி அளித்த புகாரின் பேரில், இரு தரப்பினரையும் திருவேற்காடு போலீஸார் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனர். அமிர்தவள்ளிக்கு ஆதரவாக அரசியல் தலையீடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ரேணுகாவை போலீஸார் மிரட்டியுள்ளனர். ஒருதலைப்பட்சமாக போலீஸார் அப்போது பேசியதாகக் கூறப்படுகிறது.

தனது பக்கம் உள்ள நியாயத்தை அப்போது ரேணுகா எடுத்துக் கூறியுள்ளார். அதிகம் பேசினால் தவறான தொழில் செய்பவர் என வழக்கு போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் என்று போலீஸார் ரேணுகாவை  மிரட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பலர் முன் தன்னை இவ்வாறு பேசிவிட்டார்களே என்ற அவமானத்தில் வெளியே வந்த ரேணுகா பெட்ரோலை வாங்கி தன்மேல் ஊற்றிக்கொண்டு ஸ்டேஷன் முன் தீக்குளித்தார்.

அவர் மீது தண்ணீரை ஊற்றி, பின் ரேணுகாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் போலீஸார் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரேணுகா உயிரிழந்தார்.

ரேணுகா சிகிச்சையில் இருக்கும் நேரத்தில் அவரது கணவர், மனைவி பேசியதை வாக்குமூலமாக எடுத்துள்ளார். அதில் ஏம்மா இப்படி செய்துகொண்டாய் என அவர் கேட்க, ''என்னை ஸ்டேஷனில் அவமானமாகப் பேசிவிட்டார்கள், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ. இருவரும் கடுமையாக நடந்துகொண்டார்கள்'' என்று கூறுகிறார்.

“சொன்னா என்னம்மா விட்டுட்டு வரவேண்டியது தானே, இப்ப பாரு நமக்குத்தானே துன்பம்” என்று கணவர் கேட்க ”என்னைத் தவறான தொழில் செய்பவர் வழக்கில் உள்ளே தூக்கி போட்டுவிடுவேன் என்று அவர்கள் மிரட்டினார்கள் நான் அப்படிப்பட்டவளா?” என்று கோபத்துடன் கேட்கிறார் ரேணுகா.

இதனிடையே சிகிச்சை பலனளிக்காமல் ரேணுகா இன்று உயிரிழந்தார். அவர் பேசிய ஆடியோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் கணவர் கஜேந்திரன் ஒப்படைத்தார்.

அந்தப் புகாரின் பேரில் திருவேற்காடு இன்ஸ்பெக்டர் அலெக்ஸாண்டர், எஸ்.ஐ. சரவணன் நடந்துகொண்ட விதம் குறித்தும், நடைபெற்ற சம்பவம் குறித்தும் காவல் ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டதன்பேரில் உயர் அதிகாரிகள் திருவேற்கடு காவல் நிலையத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் அதன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, காவல் நிலையம் முன் பெண் தீக்குளித்து இறந்ததை அடுத்து திருவேற்காடு சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் அலெக்சாண்டர், எஸ்.ஐ. சரவணன் இருவரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x