Published : 23 Aug 2018 09:47 AM
Last Updated : 23 Aug 2018 09:47 AM

வாஜ்பாயின் அஸ்தி சென்னை வருகை: தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்க ஏற்பாடு

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான வாஜ்பாய் கடந்த 16-ம் தேதி காலமானார். 17-ம் தேதி டெல்லியில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. வாஜ்பாயின் அஸ்தி கலசங்களில் சேகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள நதிகள், கடல்களில் கரைக்க பாஜக ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வேத மந்திரங்கள் முழங்க வாஜ்பாயின் அஸ்தி கலசங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால் ஆகியோர் வாஜ்பாயின் அஸ்தி கலசங்களை பாஜக மாநிலத் தலைவர்களிடம் வழங்கினர். மாநில பாஜக தலைவர், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அமைச்சர்கள் தலைமையில் அஸ்தி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு புனித நதிகளில் கரைக்கப்பட உள்ளது.

அமித் ஷாவிடம் இருந்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அஸ்தி கலசத்தை பெற்றுக் கொண்டார். பின்னர், 6 அஸ்தி கலசங்களும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு ஏராளமான பாஜகவினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் விமானம் மூலம் நேற்று மாலை 6 மணிக்கு சென்னைக்கு கொண்டுவரப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வாஜ்பாயின் அஸ்தி கொண்டு வரப்பட்டது.

பாஜகவினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக அஸ்தி கலசங்கள் இன்று காலை முதல் மாலை வரை பாஜக அலுவலகத்தில் வைக்கப்படும்.

பின்னர், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சென்னை கடற்கரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், முன்னாள் மாநிலத் தலைவர் இல.கணேசன் தலைமையில் திருச்சி காவிரி, தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில் ராமேஸ்வரம் கடல், முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஈரோடு பவானி, முன்னாள் மாநிலத் தலைவர் கே.என்.லட்சுமணன், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் தலைமையில் மதுரை வைகை ஆகிய இடங்களில் வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு ஒரே நேரத்தில் கரைக்கப்படும் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x