

தென்காசி: எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தென்காசி மாவட்டத்தில் ரூ.1,020 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் தொடக்க விழா, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆய்க்குடியில் நேற்று நடைபெற்றது.
2.44 லட்சம் பயனாளிகள்: இதில், 2,44,469 பயனாளிகளுக்கு ரூ.587.39 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். ரூ.141.60 கோடியில் முடிவுற்ற 117 திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, ரூ.291.19 கோடி மதிப்பில் 83 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில், முதல்வர் பேசியதாவது:
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் குடமுழுக்கை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதம் திராவிட மாடல் அரசு நடத்தியது. தமிழ
கத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். மக்களைப் பாதுகாப்பதுதான் இந்த ஆட்சியின் நோக்கம்.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விரக்தியின் உச்சிக்கே சென்று பேசுகிறார். நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று அவதூறு பரப்பு
கிறார். முந்தைய அதிமுக ஆட்சியைவிட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் 1.70 கோடி டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 42.61 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில் சராசரியாக ஆண்டுக்கு 22.70 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
பழனிசாமியிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. அவரது வரலாறே அதுதான். அதிமுக ஆட்சி
யில் அக்டோபர் முதல் தேதியில்தான் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது செப்டம்பர் முதல் நாளே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய அரசுக்கு கோரிக்கை: கொள்முதல் செய்யப்பட்ட நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதன்பேரில், மத்திய அரசு அதிகாரிகள் நெல்லைப் பார்வையிட்டு வருகின்றனர். நெல் வரத்து அதிகமாக இருப்பதால் ஞாயிற்றுக்கிழமையும் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் 3 முறை இயற்கைப் பேரிடரை சந்தித்தோம். ஆனால், நிவாரண உதவிகளை மேற்கொள்ள தமிழகம் கேட்ட ரூ.37 ஆயிரம்
கோடியை பாஜக அரசு கொடுக்கவில்லை. நிதியை கொடுத்தால் தமிழகம் வளர்ந்துவிடும், அது நடக்கக் கூடாது என மத்திய அரசு கருதுகிறது. எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
முயற்சிகளை முறியடிப்போம்: பிஹாரில் பாஜகவின் தோல்வி உறுதியானதால், வாக்காளர்களை நீக்கத் துணிந்தனர். அதையே தமிழகத்திலும் மேற்கொள்ள முயற்சிக்கின்றனர். தொடக்கம் முதலே இந்த சதியை எதிர்த்து வருகிறோம். கேரளாவும் நம்மோடு இணைந்துள்ளது. வாக்குரிமை
பறிப்பு, வாக்கு திருட்டு போன்ற பாஜகவின் முயற்சிகளை முறியடிப்போம். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முன்னதாக, தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் வரவேற்றார். விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், ராஜகண்ணப்பன், மனோ தங்கராஜ், எம்.பி.க்கள் கனிமொழி, ராபர்ட் ப்ரூஸ், ராணி குமார், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ஆவுடையப்பன், ஊரக வளர்ச்சித் துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, திமுக மாவட்டப் பொறுப்பாளர் ஜெயபாலன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.