“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” - அண்ணாமலை

“எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்குவதில் உடன்பாடு இல்லை” - அண்ணாமலை

Published on

சென்னை: ‘எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தியை கண்டேன். இதுபோன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருநெல்வேலியில் இன்று அண்ணாமலை நற்பணி மன்றம் என்ற அமைப்பை தொடங்கிய அவரின் ஆதரவாளர்கள், அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தினர். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை.

எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in