

கரூர்: கரூரில் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் செப். 29-ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பவுன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனு அக். 8-ம் தேதி தள்ளுபடியானது. தொடர்ந்து, அதே நீதிமன்றத்தில் மதியழகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு கடந்த 13-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு உள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி இளவழகன் தள்ளிவைத்தார்.
இந்நிலையில், மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், குற்றவியல் நடுவர் நீதிமன்ற விசாரணைக்கு இருவரையும் திருச்சி மத்திய சிறையில் இருந்து வீடியோ கான்பரன்ஸில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஆஜர்படுத்தினர்.
அப்போது, மேலும் 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டிப்பு செய்யுமாறு சிறப்புக் குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தவெக வழக்கறிஞர்கள், “வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருத்தை நேரில் கேட்டபிறகே காவல் நீட்டிப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும்” என வாதிட்டனர்.
வழக்கு சிபிஐக்கு...
இதையடுத்து, மாஜிஸ்திரேட் பரத்குமார் உத்தரவின்பேரில் இருவரும் நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, “வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவல் நீட்டிப்பு கேட்க முடியாது, இருவரையும் விடுவிக்க வேண்டும்” என தவெக வழக்கறிஞர் சீனிவாசன் வாதிட்டார். இருவருக்கும் காவல் நீட்டிப்பு கேட்கவில்லை.
விசாரணையை சிபிஐ நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, மதியழகன், பவுன்ராஜ் ஆகியோருக்கு காவல் நீட்டிப்பு வழங்க மாஜிஸ்ட்ரேட் பரத்குமார் மறுப்புத் தெரிவித்து, இருவரையும் விடுவித்தார். இதையடுத்து, இருவரும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பிரமாண பத்திரம் வழங்கிய பிறகு இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.