

கோவை: திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: கரூர் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர், அரசின் மீதும், காவல் துறை மீதும் தவறில்லை என்று கூறியுள்ளார். பாதுகாப்புப் பணியில் 606 போலீஸார் ஈடுபட்டதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.
ஆனால், ஏடிஜிபி டேவிட்சன் 500 பேர் பணியாற்றியதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. சிபிஐ-க்கு ஒத்துழைப்பு வழங்கி, உண்மைக் குற்றவாளிகளை கண்டறிய தமிழக அரசு உதவ வேண்டும். கரூர் சம்பவத்துக்கு யார் காரணம் என்பதும் சிபிஐ விசாரணையில் தெரியவரும்.
நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கும் பொறுப்பு உள்ளது. ஆனால், அவர்கள் மீது மட்டும்தான் தவறு என்று கூறுவதை நாங்கள் எதிர்க்கிறோம். 41 பேர் உயிரிழந்த பின்னர் ஒரு அரசு அதிகாரி மீதுகூட ஏன் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை? சென்னையில் சாலையில் நடந்த மோதல் சம்பவத்துக்கு அண்ணாமலைதான் காரணம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
அவர் முதலில் நாகரிகமான அரசியலுக்கு வர வேண்டும். நான் காவல் துறையில் பணியாற்றியபோது பல ரவுடிகளை கையாண்டவன். எனவே, மிரட்டல், உருட்டல் என்னிடம் எடுபடாது.
விசாகப்பட்டினத்தில் சந்திரபாபு நாயுடு 15 பில்லியன் டாலர் மதிப்பிலான கூகுள் நிறுவனத்தின் ஏஐ டேட்டா மையத்தை கொண்டுவந்துவிட்டார். தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதல்வரை ஏமாற்றி வருகிறார்.
திமுகவின் நடவடிக்கைகளுக்கு 2026-ம் ஆண்டு நடைபெறும் தேர்தலின்போது மக்கள்மன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.