

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாயினர். அவர்களது முன்ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை நாடினர். அங்கு இன்னும் தீர்ப்பு வரவில்லை. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இது, தவெகவினருக்கு புதுத் தெம்பை அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புஸ்ஸி ஆனந்த் நேற்று முன் தினம் இரவு விஜய்யை சந்தித்து ஆலோசனை நடத்தினார். விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கரூருக்கு விஜய் செல்ல உள்ள நிலையில், அது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கட்சி நிர்வாகிகளுடனும் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி உள்ளார்.