

சென்னை: தமிழ்நாடு அரசு சுகாதார திட்டத்தின்கீழ் செயல்படும் ‘108’ அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஆம்புலன்ஸ் சேவை மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையின்போது தீயணைப்பு, பேரிடர் மீட்பு உள்ளிட்ட அனைத்து அவசர சேவைகளுக்கும், மருத்துவ உதவிகளுக்கும் ‘108’ எண்ணை அழைக்கலாம். குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அனைத்து ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருந்துப் பொருள்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், ‘108’ என்ற ஒரே எண்ணை தொடர்பு கொண்டால், உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்துக்கு உரிய தகவல் அனுப்பப்படும். அனைத்து ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயங்களை கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது. நெருக்கடியான குடியிருப்பு பகுதிகள் மற்றும் குறுகிய பாதைகளில் துரிதமாகச் செயல்பட, அவசரகால ‘108’ பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.
ஒருங்கிணைந்த சேவை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், தீயணைப்புத்துறை, மருத்துவ கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவ சேவைகள் இணை இயக்குநர், மாவட்ட சுகாதார அதிகாரி, பேரிடர் மேலாண்மை துறைகளுடன் ஒருங்கிணைந்து இந்த சேவையில் ஈடுபடுவார்கள்.
தமிழகத்தில் எந்தப் பகுதியில் இருந்து அழைத்தாலும் சராசரியாக 10 நிமிடம் 14 நொடிகளில் சம்பந்தப்பட்ட இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்லும். ‘108’ அவசர சேவை எப்போதும் உங்களுடன் இருக்கும் நண்பனாக, உங்கள் அவசர தேவைக்கு தயாராக இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.