

சென்னை: பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி, கொறடா அருள் பதவியை பறிக்கக் கோரி சட்டப்பேரவை வளாகத்தில் பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்க வந்த அன்புமணி தரப்பு பாமக எம்எல்ஏக்கள் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சட்டப்பேரவை பாமக குழு தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணியை நீக்க வேண்டும். எம்எல்ஏ அருளின் கொறடா பதவியை பறிக்க வேண்டும்.
தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனை பேரவை பாமக குழுதலைவராகவும், மயிலம் எம்எல்ஏ சிவகுமாரை கொறடாவாகவும் நியமிக்க கோஷமிட்டனர். அப்போது, அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களது கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே பேரவை தலைவரிடம் கடிதம் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதனால், போராட்டத்தில் ஈடுபடுகிறோம். பேரவையில் பாமக குழு தலைவர், துணை தலைவர் மற்றும் கொறடாவுக்கு இருக்கைகளை தனியாக வழங்க வேண்டும் என்று பேரவை தலைவரிடம் நாங்கள் கோரிக்கை வைத்தோம். பின்னர் பேசி கொள்ளலாம் என்று பேரவை தலைவர் தெரிவித்துள்ளார். எங்களுக்கு தனி இடம் வழங்க வேண்டும்” என்றனர். இதனால், சட்டப்பேரவை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜி.கே. மணி கருத்து: இதுகுறித்து ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறும்போது, “பாமக எம்எல்ஏக்கள் 2 பிரிவாக செயல்படுவது வருத்தமளிக்கிறது. பாமகவை உருவாக்கிய ராமதாஸ் எந்த பதவிக்கும் போகாத ஒரு தலைவர். 45 ஆண்டுகளாக ஒற்றுமையாக இருந்த பாமகவுக்கு இது மிகப்பெரிய சோதனை. பாமகவில் 5 எம்எல்ஏக்களை நியமித்தவர் ராமதாஸ். அவருக்கே முழு அதிகாரம் உள்ளது. அவரது வழியில் நாங்கள் தற்போது பயணிக்கிறோம். கட்சிக்குள்ளே போராடுவது துரதிஷ்டவசமானது” என்றார்.