Published : 21 Aug 2018 10:42 AM
Last Updated : 21 Aug 2018 10:42 AM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 50 ஆயிரம் கனஅடியாக குறைப்பு

கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நீர் திறப்பு விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த‌ ஜூன் மாதம் முதல் ஜூலை வரை தென்மேற்கு பருவமழை பெய்தது. இதனால் காவிரியின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய 4 அணைகளும் ஜூலை இறுதியில் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் கன‌மழை பெய்தது. இதேபோல், கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை காரணமாக கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கூடுதல் நீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 2.30 லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு 2.05 லட்சம் கனஅடி நீர் வந்தது.

இந்நிலையில், செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 80 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.25 அடியாகவும், நீர் இருப்பு 92.28 டிஎம்சியாகவும் உள்ளது. நீர் திறப்பு விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x