

கரூர்: கரூர் தவெக பிரச்சார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனின் ஜாமீன் மனு விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த மதியழகனை திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே தனிப்படை போலீஸார் செப்.29-ம் தேதி கைது செய்தனர். மேலும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த பவுன்ராஜும் கைது செய்யப்பட்டார். விடிய, விடிய விசாரணை நடத்திய போலீஸார் செப்.30-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்.8-ம் தேதி பவுன்ராஜின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த நிலையில் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவ்வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்ட நிலையில், மதியழகனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அக்.9-ம் தேதி இரண்டு நாள் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
விசாரணை முடிந்த நிலையில் அக்.11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மதியழகனை அக்.14-ம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் மதியழகன் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வி.பி.மதியழகனின் ஜாமீன் மனு இன்று (அக்.13ம் தேதி) விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி இளவழகன், இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் தேதி குறிப்பிடாமல் விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.