போராடும் மின்வாரிய கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது சரியல்ல: பேச்சுவார்த்தை நடத்த சண்முகம் வலியுறுத்தல்
சென்னை: பணி வரன்முறை செய்யக்கோரி போராடும் கேங்மேன் தொழிலாளர்களை கைது செய்வது ஏற்கத்தக்கது அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: மின்வாரியத்தில் பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்கள், தங்களை கள உதவியாளர்களாக பணி வரன்முறை செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் 10 தலைமை பொறியாளர்கள் அலுவலகங்கள் முன்பு அக்.7 முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கே.கே.நகர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு அமைதியாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை காவல்துறை அன்று இரவு கைது செய்து, நேற்று அதிகாலை விடுவித்துள்ளது. அதைத்தொடர்ந்து மீண்டும் இத்தொழிலாளர்கள் நேற்று காலையில் போராட்டத்தில் இறங்கினர். அவர்களை காவல்துறை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.
கடந்த 2023-ல் ஏற்பட்ட பெருமழை, வெள்ளத்தின்போது கேங்மேன் தொழிலாளர்கள் அயராது பணியில் ஈடுபட்டதால், அவர்களை கள உதவியாளர்களாக பணி வரன்முறை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பை நிறைவேற்ற இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததன் காரணமாகவே தற்போது தொழிலாளர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு பதிலாக, காவல்துறை மூலம் தொழிலாளர்களை தமிழக அரசு கைது செய்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல. இது சரியான ஜனநாயக நடைமுறையாகாது. எனவே, கைது நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
