கரூர் சம்பவம் | ‘உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்க வேண்டும்’ - நயினார் நாகேந்திரன்
கரூர்: கரூர் துயர சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்து உரிய தீர்வு காணவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 39 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் ஆளுநரும், மாநில தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இன்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறும்போது, “மிகப் பெரிய இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறன். இது தொடர்பாக உடனடியாக யாரையும் குற்றம்சாட்ட முடியாது. இந்த துயரச் சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டு உரிய தீர்வு காணவேண்டும்” என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
