திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு

திமுக அறக்கட்டளை வருமான வரி வழக்கு: வருமான வரித் துறைக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு
Updated on
1 min read

சென்னை: திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, அமைச்சர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஒருங்கிணைந்த விசாரணை நடத்த வேண்டும் என்ற காரணத்தை கூறி, திமுக கட்சி, திமுக அறக்கட்டளைக்கு எதிரான வருமான வரி வழக்குகளின் விசாரணையையும் , துரைமுருகன் தொடர்பான வழக்கு விசாரணையையும் வருமான வரித்துறையின் மத்திய சர்க்கிளுக்கு மாற்றி, வருமான வரித் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவுகளை எதிர்த்து திமுக அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விசாரணை யை மத்திய சர்கிளுக்கு மாற்றி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமான வரித் துறை தரப்பில், தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் விசாரணையின் போது திமுக அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “கட்சியின் பொதுச் செயலாளர் வருமான வரி கணக்கு வேறு, திமுகவின் வருமான வரி கணக்கு வேறு. இரண்டையும் வருமான வரித் துறையின் மத்திய சர்க்கிள் விசாரிக்க கூடாது” என வாதிட்டார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி திமுக அறக்கட்டளைக் கு உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு தள்ளி வைத்தது. அதுவரை திமுக அறக்கட்டளை தொடர்பான வருமான வரி வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என வருமான வரித் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in