Published : 03 Aug 2018 12:43 PM
Last Updated : 03 Aug 2018 12:43 PM
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி கடிதம் எழுதிய மூன்றாம் வகுப்பு சிறுமியை காவேரி மருத்துவமனையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாடி மகிழ்ந்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீரென ரத்த அழுத்தம் குறையவே கடந்த 27-ம் தேதி நள்ளிரவு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறப்பு மருத்துவர்கள் குழு 24 மணி நேரமும் கண்காணித்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. கடந்த 29-ம் தேதி மாலை அவரது இதயத்துடிப்பு குறைந்து உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. ஆனாலும், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக உடல்நிலை சீரானது. கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டில் வசித்து வரும் மூன்றாம் வகுப்பு படிக்கும் மிச்சேல் மிராக்ளின் என்ற சிறுமி கருணாநிதி உடல் நலம் பெற வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “கருணாநிதி தாத்தாவை எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தெரிந்தவுடன் நான் அழுதேன். உங்களுக்காக பிரார்த்தனை செய்தேன். மறுநாள் காலையில் நீங்கள் நன்றாக இருப்பதாக என் அம்மா சொன்னார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. பள்ளிக்கு மகிழ்ச்சியாகச் சென்றேன்” என அச்சிறுமி எழுதியுள்ளார்.
இந்நிலையில், அந்தச் சிறுமி தன் தாயுடன் காவேரி மருத்துவமனைக்கு சென்று திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் அக்கடிதத்தை அளித்தார். மேலும், அச்சிறுமியுடன் மு.க.ஸ்டாலின் உரையாடி மகிழ்ந்தார்.
கருணாநிதி உடல்நலம் பெற்று வீடு திரும்பியவுடன் நிச்சயமாக தகவல் தெரிவிப்பதாகவும், வீட்டுக்கு வந்து கருணாநிதியை சந்திக்கலாம் எனவும், அச்சிறுமிக்கு ஸ்டாலின் உறுதியளித்தார். இந்த வீடியோவை திமுக தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT