Published : 09 Aug 2014 11:01 AM
Last Updated : 09 Aug 2014 11:01 AM
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் லில் விநாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் ஒகேனக்கல்லில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்ப்பதால் அங்குள்ள அணைகள் நிரம்பிவருகின்றன. கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கடந்த 15 நாட்களுக்கும் மேலாக விநாடிக்கு சுமார் 40 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. தொடர்ந்து கர்நாடகாவில் மழைப்பொழிவு தீவிரமடைந்ததால் காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியைக் கடந்தது. இதனால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
வியாழக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இரவு 8 மணி அளவில் 65 ஆயிரம் கன அடியைக் கடந்தது. அது மேலும் அதிகரித்து வெள்ளிக்கிழமை காலை 10 மணி நிலவரப்படி 76 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது. பின்னர் மாலையில் விநாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக வெள்ளம் பெருக்கெடுத்தது. அதிகப்படியான நீர்வரத்தால் ஒகேனக்கல்லில் வெள்ளம் சீறிப்பாய்ந்து கொண்டிருக் கிறது.
ஒகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுவதால் வியாழக்கிழமை மாலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆட்சியர் எச்சரிக்கை
மேலும், நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை விரைவில் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதால் கரையோரங்களில்கூட யாரும் குளிக்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒகேனக்கல்லில் ஒலிபெருக்கியில் விளம்பரம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் கூறும் போது, துணை ஆட்சியர், வட்டாட் சியர், வருவாய் அலுவலர்கள் என 50 பேர் அடங்கிய குழுவினர், காவல்துறை சார்பில் 70 பேர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் சார்பில் 25 பேர், வனத்துறை சார்பில் 15 பேர் என 160-க்கும் மேற்பட்டோர் ஒகேனக்கல் மற்றும் காவிரி ஆற்றை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT