முனியப்பன், கவுன்சிலர் ரம்யா, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் (மேலிருந்து கீழாக)
முனியப்பன், கவுன்சிலர் ரம்யா, விழுப்புரம் மாவட்ட எஸ்.பி சரவணன் (மேலிருந்து கீழாக)

பட்டியலின ஊழியரை காலில் விழவைத்ததாக வெடித்த சர்ச்சை! - ஆளும் கட்சியினர் என்பதால் அடக்கிவாசிக்கிறதா போலீஸ்?

Published on

“சமூக நீதிக்கான ஒரே கட்சி திமுக தான் என்பது போல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். உண்மையில், சமூக நீதி குறித்துப் பேச திமுக-வுக்கு எந்தத் தகுதியும் இல்லை. இதற்கு, திண்டிவனம் நகராட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவரை, திமுக பெண் கவுன்சிலரின் காலில் விழச் செய்த சம்பவமே சான்று” - மதுரை பிரச்சார பயணத்தில் இப்படியொரு விமர்சனத்தை முன்வைத்தார் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. அத்தோடு அதிமுக-வினர் அந்தச் சம்பவத்தை மறந்துவிட்டு அடுத்த டாபிக் தேடி போய் விட்டாலும் திண்டிவனம் நகராட்சியில் இன்னும் சகஜ நிலை திரும்பவில்லை.

திண்​டிவனம் நகராட்சி இப்​போது திமுக வசம் இருக்​கிறது. தலை​வ​ராக நிர்​மலா ரவிச்​சந்​திரன் இருக்​கி​றார். துணைத் தலை​வ​ராக விசிக-வை சேர்ந்த ராஜலட்​சுமி வெற்​றிவேல் இருக்​கி​றார். இவரை வேட்​பாள​ராக அறி​வித்த போதே சர்ச்சை வெடித்​தது. அதையெல்​லாம் கடந்து துணைத் தலை​வர் இருக்​கை​யைப் பிடித்த ராஜலட்​சுமிக்கு தலை​வ​ருக்கு அரு​கில் இருக்கை போட​வில்லை என அடுத்த சர்ச்சை வெடித்​தது. இது தொடர்​பாக ராஜலட்சுமி ஆட்​சி​யர் வரைக்​கும் புகார் அளித்த போதும் அண்​மை​யில் தான் அவருக்​கான இருக்கை உறு​தி​யானது.

இந்த நிலை​யில் தான், இங்கு இளநிலை உதவி​யாள​ராகப் பணி​புரி​யும் பட்​டியலினத்​தைச் சேர்ந்த முனியப்​பன் என்​பவரை திமுக கவுன்​சிலர் ரம்​யா​வின் காலில் விழ​வைத்​த​தாக சர்ச்சை வெடித்து அது இபிஎஸ் எடுத்​துப் பேசுமளவுக்கு விவ​கார​மாகிப் போனது. இது தொடர்​பாக வெளி​யான வீடியோ​வில் முனியப்​பன் கவுன்​சிலர் ரம்​யா​வின் காலில் விழுந்து அழு​வது போல் காட்​சிகள் வரு​கின்​றன. அலு​வல​கத்​தின் கோப்பு ஒன்றை தேடும் விஷ​யத்​தில் முனியப்​பனுக்​கும் கவுன்​சிலர் ரம்​யா​வுக்​கும் இடை​யில் நடந்த பேச்​சு​வார்த்​தை​யின் உச்​ச​மாகத்​தான் இந்​தச் சம்​பவம் நடந்​த​தாகச் சொல்​கிறது முனியப்​பன் தரப்​பு.

இது தொடர்​பாக கவுன்​சிலர் ரம்​யா, அவரது கணவர் மரூர் ராஜா, நகர்​மன்​றத் தலை​வரின் கணவர் ரவிச்​சந்​திரன் உள்​ளிட்ட திமுக-​வினர் 5 பேர் மீது வன்​கொடுமை தடுப்​புப் பிரி​வில் வழக்​குப் பதிவு செய்​திருக்​கிறது போலீஸ். அதேசம​யம், காலில் விழு​வது போல் நடித்​து, வலது கையால் தனது கால்​களை பிடித்​துக் கொண்​டு, இடது கையால் தனது உடலை தொட்டு பாலியல் சீண்​டலில் ஈடு​பட்​ட​தாக கவுன்​சிலர் ரம்யா கொடுத்த புகாருக்​கும் வழக்​குப் பதிவு செய்​திருக்​கும் போலீ​ஸார், மேற்​கொண்டு எந்த முன்​னேற்​ற​மும் காட்​டா​மல் காலத்​தைக் கடத்​துகி​றார்​கள்.

இது குறித்து நம்​மிடம் பேசிய முனியப்​பன், “சாதி பெயரைச் சொல்லி திட்​டி, என்னை காலில் விழ​வைத்த பெண் கவுன்​சிலர் உள்​ளிட்​டோர் மீது எஸ்சி - எஸ்டி வன்​கொடுமை பிரி​வில், போலீ​ஸார் வழக்​குப் போட்​டிருந்​தா​லும் இது​வரைக்​கும் யாரை​யும் கைது செய்​யாதது ஏன் என்று தெரிய​வில்​லை. காலம் கடந்​தா​லும் போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.

கவுன்​சிலர் ரம்​யா​விட​மும் பேசினோம். “நான் எந்​தத் தவறும் செய்​ய​வில்​லை. அவரை (முனியப்​பன்) காலில் விழ​வும் சொல்​ல​வில்​லை. இது தொடர்​பான வீடியோ காட்​சிகள் இருக்​கிறது. அதில் ஆடியோ​வும் தெளி​வாக இருக்​கிறது. நான் கொடுத்த புகாரின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரண்டு புகார்​கள் தொடர்​பாக​வும் போலீ​ஸார் விசா​ரிக்​கி​றார்​கள். இதனிடையே நாங்​கள் முன்​ஜாமீன் கேட்டு உயர் நீதி​மன்​றத்தை நாடி உள்​ளோம்” என்​றார் அவர்.

விழுப்​புரம் மாவட்ட எஸ்​பி-​யான சரவணனிடம் இது தொடர்​பாக கேட்​ட​போது, “இரண்டு தரப்​பிலும் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்​டுள்​ளது. வீடியோ காட்​சிகளை வைத்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது. கூடு​தல் ஆதா​ரங்​களை​யும் சேகரித்து வரு​கி​றோம். இது​வரை யாரும் முன் ஜாமீன் பெற​வில்​லை. விசா​ரணை அடிப்​படை​யில், யார் தவறு செய்​திருந்​தா​லும் நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

இதனிடையே, ஆளும் கட்​சி​யின​ராக இருப்​ப​தால் கவுன்​சிலர் ரம்யா உள்​ளிட்​டோர் மீது நடவடிக்கை எடுக்​க​வில்லை என்று சமூக வலை​தளங்​களில் பலரும் பலவாறாக விமர்​சனங்​களை முன்​வைத்து வரு​கி​றார்​கள். அதற்​கேற்ப, வழக்​குப் போட்டு ஒரு வாரத்​திற்கு மேலாகி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​முடி​யாமல் திக்​கித் திணறி வரு​கிறது திண்​டிவனம் போலீஸ்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in