வானிலை முன்னறிவிப்பு: கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (செப்.12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ஒடிசா - வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகத்தில் நாளை (செப்.12) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 13 முதல் 17-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுதினம் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாநகரில் 13 செமீ, தல்லாகுளம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டியில் தலா 12 செமீ, திருச்சி மாவட்டம் துரையூர், கரூர் மாவட்டம் கடவூரில் 9 செமீ, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி, பொன்மலை, மதுரை மாவட்டம் புலிப்பட்டி, பெரியபட்டியில் தலா 8 செமீ, பெரம்பலூரில் 7 செமீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in