Published : 14 Jul 2018 07:35 AM
Last Updated : 14 Jul 2018 07:35 AM
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் 10 மீனவர்களை ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த 3 பேருக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகை துறைமுகத்திலிருந்து கடந்த 7-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இதில் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 19 மீனவர்கள் 2 விசைப் படகுகளில் நேற்று முன்தினம் காலை ஆந்திரா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆந்திர மீனவர்கள் தங்கள் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததாக கூறி, நாகை மீனவர்கள் 19 பேரையும், 2 விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து கடற்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகையும் மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாகை ஆட்சியரிடம் மனு அளித்தனர்
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆந்திரா கடற்பகுதியில், மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் மேலும் 10 பேரையும், அவர்கள் சென்ற ஒரு படகையும் ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அக்கரைப்பேட்டை மீனவர்கள் காத்தலிங்கம், இடும்பன், ஜெகதீஷ் ஆகியோர் நெல்லூர் அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று பின்னர், நேற்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக நாகை மீனவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நாகை மீனவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT