Published : 05 Aug 2014 09:23 AM
Last Updated : 05 Aug 2014 09:23 AM

மனைவியை கொன்று தண்டவாளத்தில் வீச்சு: 3 திருமணம் செய்த கணவர் தலைமறைவு

சேலம் அருகே உள்ள வீராணம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது முதல் மனைவி ரெஜினா (31). இவரை கடந்த 31-ம் தேதி முதல் காணவில்லை. கடந்த 1-ம் தேதி இவரது உடல் சேலம் அருகே உள்ள ராமலிங்கபுரம் ஆள் இல்லாத ரயில்வே கேட் அருகில் கிடந்தது. ரெஜினாவின் தலை துண்டிக்கப்பட்டு ரயில் தண்டவாளத்திலும், உடல் ரோட்டிலும் கிடந்தது. சேலம் ரயில்வே போலீஸார் ரெஜினாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

விசாரணையில், ரெஜினா ரயில் மோதி இறக்கவில்லை என்றும் கொலை செய்யப்பட்டு உடல் வீசப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இது சம்பந்தமாக சேலம் அம்மாப்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீஸார் விசாரித்தனர்.

ரெஜினாவின் உடல் ஞாயிற் றுக்கிழமை பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவரது உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. இக்கொலை தொடர்பாக ரெஜினாவின் கணவர் ரமேஷை போலீஸார் தேடிவருகின்றனர்.

போலீஸார் நடத்திய விசார ணையில் ரமேஷ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் நடந்த ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கில் கைதானவர் ரமேஷ். இவர், மாலதி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து தீவட்டிப்பட்டி பகுதியில் வசித்தார். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் மாலதியை கொலை செய்தாராம் ரமேஷ். இந்த வழக்கில் ரமேஷை தீவட்டிப்பட்டி போலீஸார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பின், அவர் ஜாமீனில் வெளியில் வந்தார். சேலம் பள்ளிப்பட்டியைச் சேர்ந்த தங்கம் (39) என்பவரை மூன்றாவது திருமணம் செய்துள்ள ரமேஷ், தற்போது, அவருடன் வசித்து வருகிறார்.

முதல் மனைவி ரெஜினா வுக்கும், ரமேஷுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லை. இந்நிலையில், கடந்த 31-ம் தேதி ரெஜினாவை ரமேஷ் சமாதானம் செய்ததாகவும், ரெஜினாவுக்கு புடவை வாங்கித் தருவதாகவும் கூறி அழைத்து சென்றதும் தெரியவந்தது.

இதன் பின்னரே ரெஜினாவை காணவில்லை. இந்த கொலையில் ரமேஷுக்கு தொடர்பு இருக்கக் கூடும் என்பதால், அவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

ரமேஷ் சென்னையில் பதுங்கி இருக்கலாம் என்பதால், தனிப்படை போலீஸார் சென்னை விரைந்துள்ளனர். ஐம்பொன் சிலை கடத்தல் வழக்கில் ரமேஷுடன் கைது செய்யப்பட்ட சிலரிடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x