தமிழகத்தில் செப்.5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் செப்.5 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை (ஆக.31) முதல் செப்.5-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். செப்.2 முதல் 5-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்திலும், இடையிடையே 60 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை, சின்கோனா, சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி, மாஞ்சோலை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, கோவை மாவட்டம் சோலையார், பொள்ளாச்சி, தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in