அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: அரசு மருத்துவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்டதற்காக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை, சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து சென்னை நோக்கி, கடந்த ஜூன் 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.

இந்நிலையில், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பணியாற்றி வந்த அவரை, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதே விவகாரம் தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தன்னை பணியிடம் மாற்றம் செய்தது தன்னிச்சையானது எனக் கூறி அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் பெருமாள் பிள்ளை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் தனது பணியிட மாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி. டி .ஆஷா, மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in