வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும்: அமைச்சர்

வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும்: அமைச்சர்

Published on

புதுச்சேரி: வெளிநாடு செல்லும் புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் பயணப்படியை அரசே ஏற்கும். விரைவில் இதற்கான அரசாணை வெளியிடப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.

புதுவை முத்தியால்பேட்டையில் 18-வது மாநில கேரம் போட்டிகள் 3 நாட்களாக நடந்தது. 4 பிரிவாக நடந்த போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம், எம்எல்ஏ அனிபால் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், "புதுவையில் நீண்டகாலமாக கல்வித் துறையுடன் விளையாட்டு துறை இருந்தது. தற்போது தனியாக விளையாட்டுத் துறையை பிரித்த பின் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

உலக, தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ரூ.9 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.38 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லும் வீரர்களின் பயணப்படியை அரசே ஏற்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது" என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in