Published : 14 Jul 2018 06:19 PM
Last Updated : 14 Jul 2018 06:19 PM
பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் ராட்சத கணவாய் மீன் சிக்கியது. இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் ராக்கெட் கணவாய், ஊசி கணவாய், ஒட்டு கணவாய், பேய்க்கடம்பான், சாக்குச்சுருளி, சிலந்தி மீன், நீராளி ஆகிய கணவாய் மீன்கள் கிடைக்கின்றன. கணவாய் மீன்கள் எல்லா வகையான வலைகளிலும் எளிதில் சிக்காது. எனவே இதற்காக பிரத்யேக வலைகளும், தூண்டில்களும் பயன்படுத்தப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது கணவாய் மீன் சீசன் தொடங்கி உள்ளது.
இந்நிலையில் பாம்பனில் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்று சனிக்கிழமை கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர் ஒருவர் வலையில் சுமார் 10 கிலோ எடையுள்ள 6 அடி நீளமுள்ள ராட்சத கணவாய் மீன் சிக்கியது. இதனை மண்டபம் முகாம் மீன் சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
இந்த மீனைப் பற்றி மரைக்காயர் பட்டிணத்தில் உள்ள மத்திய மீன் ஆராய்ச்சித்துறை ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ''கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்று அழைக்கப்படும் கணவாய் மீன்கள் மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய கணவாய் ராட்சத ஸ்க்விட் (Giant Squid) இனத்தைச் சேர்ந்தது ஆகும். ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும் இந்த வகை கணவாய்கள் அதிகபட்சமாக 13 மீட்டர் நீளம் வரையிலும் வளரக் கூடியது. உலகிலுள்ள உயிரினங்களில் மிகப்பெரிய கண்ணினைக் கொண்ட உயிரினமும் இதுதான். இதன் கண்கள் அதிகபட்சம் 27 செ.மீ வரையிலும் இருக்கும். திமிங்கலங்கள் இதன் பிரதான எதிரிகள் ஆகும்.
இந்த வகை சூரிய மீன்கள் பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களின் ஆழ்கடல் பகுதிகளில் காணப்படும். ஆழமற்ற பாம்பன் கடல் பகுதியில் சிக்குவது மிகவும் அரிதாகும்'' எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT