Published : 02 Jul 2018 08:21 AM
Last Updated : 02 Jul 2018 08:21 AM
போலி பாஸ்போர்ட் மூலம் வெளி நாடு செல்வதற்கு உதவிய அதிகாரிகள் யார் என்பது தொடர் பாக விமான நிலையம் மற்றும் இமிகிரேஷன் அலுவலகங்களில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்ததாக வேளச்சேரியை சேர்ந்த வீரக்குமார், அவரது தம்பி பாலசுப்பிரமணியன் மற்றும் இலங்கை தமிழர்கள் 6 பேர் உட்பட 11 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 24-ம் தேதி கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து 80 இந்திய போலி பாஸ்போர்ட்கள், 12 இலங்கை போலி பாஸ்போர்ட்கள் மற்றும் இவற்றை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதலில் இந்த வழக்கை திருவல்லிக்கேணி போலீஸாரே விசாரித்தனர். ஆனால் போலி பாஸ்போர்ட் தயாரித்தவர்களுக்கு பெரிய அளவில் நெட்வெர்க் இருப்பதை அறிந்து, இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்தே 11 பேர் ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். வீரக்குமார் கைது செய்யப்பட்டபோது பல இடங்களில் இருந்து மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி பாஸ்போர்ட் கொண்டு செல்லும் நபர்களுக்கு சில விமான நிலைய அதிகாரிகளும், குடியேற்றப்பிரிவு (இமிகிரேஷன்) அதிகாரிகளும் உதவி செய்திருப்பது தெரியவந்துள் ளது.
விமான நிலைய அதிகாரிகள் குறித்து அறிவதற்காக, மத்திய குற்றப்பிரிவு போலீஸார், சென்னை விமான நிலையம் சென்று சிலரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சென்னை சாஸ்திரி பவன் கட்டிடத்தில் உள்ள இமிகிரேஷன் அலுவலகத்துக்கும் ரகசியமாக சென்று, சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை நடத்த வேண்டிய அதிகாரிகள் பெரிய பதவியில் இருப்பதால், மத்திய குற்றப்பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் நேரடி விசாரணையில் ஈடுபட இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT