யார் இந்த சி.பி.​ராதாகிருஷ்ணன்? - குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான தமிழர்!

யார் இந்த சி.பி.​ராதாகிருஷ்ணன்? - குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரான தமிழர்!
Updated on
2 min read

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சி.பி.​ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூரைச் சேர்ந்த சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன், மகாராஷ்டிராவின் ஆளுநராக 2024-ம் ஆண்டு ஜூலை 31 அன்று பதவியேற்றார். அதற்கு முன்பு, அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார்.

அக்டோபர் 20, 1957 அன்று பிறந்த ராதாகிருஷ்ணன், வணிக நிர்வாகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சுவயம்சேவகர் ஆக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1974-ம் ஆண்டு பாஜகவின் முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

1996-ம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 1998, 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோவையில் இருந்து இருமுறை எம்​.பி.​யாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2004 முதல் 2007-ம் ஆண்டு வரை தமிழக பாஜக தலைவராக பதவி வகித்தார். பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை யாத்திரை மேற்கொண்டார்.

பல்வேறு நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும், துணிநூல் தொடர்பான நிலைக் குழுவின் தலைவராகவும் இருந்தார். பாஜக தேசிய செயலாளர், தேசிய நிர்வாக குழு உறுப்பினர், கேரள மாநில பாஜக பொறுப்பாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கையை தாண்டி, ராதாகிருஷ்ணன் கல்லூரி காலத்தில் டேபிள் டென்னிஸில் சாம்பியனாகவும், ஓட்டப்பந்தய வீரராகவும் இருந்துள்ளார். கிரிக்கெட் மற்றும் கைப்பந்து அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்.

கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி முதல் மகாராஷ்டிர ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

இந்தச் சூழலில் குடியரசு துணைத் தலை​வர் தேர்தலுக்கான வேட்​பாளரை தேர்வு செய்​வது தொடர்​பாக தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் ஆலோசனை கூட்​டம் டெல்​லி​யில் சமீபத்​தில் நடை​பெற்​றது. இதில், வேட்​பாளரை தேர்வு செய்​யும் அதி​காரம் பிரதமர் மோடி, பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா ஆகியோ​ருக்கு வழங்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், டெல்​லி​யில் பிரதமர் மோடி தலை​மை​யில் பாஜக ஆட்​சிமன்​றக் குழு கூட்​டம் ஞாயிற்றுக்கிழமை நடை​பெற்​றது. பிரதமர் இல்​லத்தில் நடை​பெற்ற இந்த கூட்​டத்​தில் பாஜக தேசிய தலை​வர் ஜே.பி.நட்​டா, மத்​திய அமைச்​சர்​கள் அமித் ஷா, ராஜ்​நாத் சிங் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்​டத்​துக்கு பிறகு, ‘குடியரசு துணைத் தலை​வர் தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​டணி வேட்​பாள​ராக சி.பி.​ரா​தாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

குடியரசு துணைத் தலை​வர் பதவிக்​கான வேட்​புமனு தாக்​கல் கடந்த 7-ம் தேதி தொடங்​கியது. 21-ம் தேதிக்​குள் மனுக்​களை தாக்​கல் செய்ய வேண்டும். சி.பி.ராதாகிருஷ்ணன் 21-ம் தேதி வேட்​புமனுவை தாக்​கல் செய்​வார் என்று கூறப்​படு​கிறது.

வெல்வது உறுதி: காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் அடங்​கிய இண்​டியா கூட்​டணி சார்​பில் குடியரசு துணைத் தலை​வர் பதவிக்கு பொது வேட்​பாளரை நிறுத்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பல்​வேறு கட்​சிகளின் தலை​வர்​களு​டன் காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தொடர்ந்து ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் அறிவிக்​கப்​பட்ட பிறகு இண்​டியா கூட்​ட​ணி​யின் வேட்​பாளர் தேர்வு செய்​யப்​படு​வார் என்று காங்​கிரஸ் வட்​டாரங்​கள் ஏற்​கெனவே தெரி​வித்​துள்​ளன. இதன்​படி அந்த கூட்​ட​ணி​யின் வேட்​பாளர்​ விரை​வில்​ அறிவிக்​கப்​படு​வார்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

தற்​போது மக்​களவை​யில் ஒரு எம்​.பி., மாநிலங்​களவை​யில் 5 எம்​.பி.க்​கள் இடங்​கள் காலி​யாக உள்​ளன. எனவே, வரும் தேர்​தலில் 782 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்​ளனர். தேர்​தலில் வெற்றி பெற 50 சதவீத எம்​.பி.க்​களின் ஆதரவு தேவை. இதன்​படி, 391 எம்​.பி.க்​களின் ஆதரவை பெறும் வேட்​பாளர், புதிய குடியரசு துணைத் தலை​வ​ராக தேர்வு செய்​யப்​படு​வார்.

நாடாளு​மன்​றத்​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு 422 எம்​.பி.க்​களும், எதிர்க்​கட்​சிகளின் இண்​டியா கூட்டணிக்கு 312 எம்​.பி.க்​களும் உள்​ளனர். ஆளும் தேசிய ஜனநாயக கூட்​ட​ணிக்கு பெரும்​பான்மை பலம் இருப்​ப​தால், அந்த கூட்டணியின் வேட்​பாளர் சி.பி.​ராதாகிருஷ்ணன் வெற்றி பெறு​வது உறு​தி​யாகி​யுள்​ளது.

திருப்பூர் மூத்த அரசியல்வாதிகள் கூறும்போது, “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மையமாக வைத்தே, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சி.பி.​ராதாகிருஷ்ணனுக்கு நாட்டின் உயரிய பதவியை பாஜக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த தேர்தல்களில் கொங்கு மண்டலத்தை வென்றெடுக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்திருந்ததால், இந்த அறிவிப்பும் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டல பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாஜகவின் இந்த அறிவிப்பின் மூலம் கொங்கு மண்டலம், மேலும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in