வானிலை முன்னறிவிப்பு: தருமபுரி, சேலம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கடலோர ஆந்திர பிரதேசத்தில் இருந்து, கடலோர தமிழகம் வழியாக வடக்கு இலங்கை வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, வட தமிழகத்தில் நாளை (ஆக.9) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை முதல் 12ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி அளவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, காவேரிப்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா, வேலூர் மாவட்டம் அம்முண்டி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் 7 செ.மீ மழை, வேலூர் மாவட்டம் காட்பாடி, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் பாலாறு அணைக்கட்டு, திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in