Published : 19 Aug 2014 12:00 AM
Last Updated : 19 Aug 2014 12:00 AM
தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடிய பார்வையற்ற பட்டதாரி மாணவர்களை சென்னை மாநகருக்கு 70 கி.மீ. வெளியே கொண்டுபோய் விட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் காவல் துறையினர் விரிவாக பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஆர்.முகமது நசுருல்லா என்ற பார்வையற்ற வழக்கறிஞர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.
“தங்கள் கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என அமைதியான முறையில் போராடிய பார்வையற்ற பட்ட தாரிகளை வாகனங்களில் ஏற்றிய காவல் துறையினர், அவர்களின் இயலாமையைப் பயன்படுத்தி சென்னை மாநகரத்துக்கு வெளியே 70 கி.மீ., 80 கி.மீ. தொலைவுக்கு அப்பால் விட்டுவிட்டு வந்துள்ளனர். ஒருநாள் ஒரு சுடுகாட்டில் கொண்டு போய் அவர்களை விட்டுவிட்டு வந்துள்ளனர். பெண்கள் உள்பட பார்வையற்ற மாணவர்கள் பலரை காவல் துறையினர் தாக்கியுள்ளனர்.
இந்தப் பிரச்சினையில் நீதி மன்றம் தலையிட வேண்டும். பார்வையற்றவர்களைக் கண்ணி யமாக நடத்தும் வகையில் அரசுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் நசுருல்லா கூறியி ருந்தார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் தாமாகவே முன்வந்து பொது நல வழக்காக எடுத்துக் கொண்ட உயர் நீதிமன்றம், இது தொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த மனுவுக்கு அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. போராட்டம் நடத்திய பார்வையற்ற பட்ட தாரிகள் சமூகக் கூடங்கள், திருமண மண்டபங்கள் போன்ற இடங்களில் தங்க வைக்கப்பட்டதாகவும், அவர்
களுக்குத் தேவையான உணவு மற்றும் குடிநீர் வழங்கப் பட்டதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
“இந்த வழக்கில் அரசு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. ஆகவே, காவல் துறையினர் எத்தனை பார்வையற்றவர்களை தங்கள் பாதுகாப்பில் வைத்திருந்தனர், பார்வையற்றவர்களை தங்க வைத்த சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்களின் விவரங்கள், எந்தெந்த இடத்தில் யார் யார் தங்க வைக்கப்பட்டனர், எப்போது, எந்த நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர், அவர்கள் தங்கள் சொந்த இடத்துக்கு திரும்பிச் செல்ல செய்து தரப் பட்ட உதவிகள் என்னென்ன, இதுபோன்ற மாற்றுத் திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது அவர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள்போன்ற விவரங்களுடன் காவல் துறையினர் 2 வாரங்க ளுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT